புதுமணத் தம்பதிகளை தேனிலவுக்கு இவ்வளவு தூரம் அனுப்ப வேண்டுமா? - ம.பி. முதல்வர்
புதுமணத் தம்பதிகளை தேனிலவுக்கு இவ்வளவு தூரம் அனுப்ப வேண்டுமா? என பெற்றோர்கள் சிந்திக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக ராஜா ரகுவன்ஷி கொலை விவகாரத்தில் மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ் கூறியுள்ளார்.
மத்திய பிரதேச மாநிலம், இந்தூரைச் சோ்ந்த சோனம் (24) என்பவருக்கும் தொழிலதிபரான ராஜா ரகுவன்ஷிக்கும் (28) மே 11-ஆம் தேதி திருமணம் நடைபெற்ற நிலையில் சில நாள்களுக்குப் பின் மேகாலயத்துக்கு தேனிலவு சென்றுள்ளனர்.
தேனிலவு சென்ற புதுமணத் தம்பதிகள் இருவரும் காணாமல்போக, குடும்பத்தினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் ராஜா ரகுவன்ஷி இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
கூலிப் படையினா் மூலம் கணவரை தீா்த்துக் கட்டியதாக சோனம் கைது செய்யப்பட்டுள்ளார். சோனம் பெற்றோரின் தொழிற்சாலையில் கணக்காளராக இருந்த ராஜ் சிங் குஷ்வாஹாவுடன் காதல் ஏற்பட்டதால் அவரது உதவியுடன் கணவரைக் கொன்றுள்ளது தெரிய வந்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாக மேலும் பல அதிர்ச்சித் தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன.
இந்நிலையில் இதுதொடர்பான செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ்,
"தங்கள் பிள்ளைகளின் திருமணத்தைப் பற்றி குடும்பத்தினர் விவாதிக்கும்போது, அது தொடர்பான பல விஷயங்களை கவனமாகப் பரிசீலிக்க வேண்டியது அவசியம். திருமணமான புதுமணத் தம்பதிகளை தேனிலவுக்கு இவ்வளவு தூரம் அனுப்ப வேண்டுமா? என வரும் நாள்களில் பெற்றோர்கள் சிந்திக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தால் நான் மிகவும் வேதனையடைந்தேன், ஆனால் இதன் மூலமாக நாம் அனைவரும் ஒரு பாடம் கற்றுக்கொண்டோம். இது மிகவும் சிக்கலான வழக்கு" என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க | தேனிலவு கொலை: கடைசி நேரத்தில் மாறிய திட்டம்.. மனம் மாறாத சோனம்!