பிரதமா் தலைமையில் பிரதமரின் அருங்காட்சியகம் மற்றும் நூலக சங்க ஆண்டு கூட்டம்
புதுவை காவல் நிலையங்களில் பிராந்திய மொழிகளில் முதல் தகவல் அறிக்கை
புதுச்சேரி: புதுவை மாநில காவல் நிலையங்களில் பதிவாகும் முதல் தகவல் அறிக்கை அந்தந்த பிராந்திய மொழிகளில் இடம்பெற வேண்டும் என்று காவல் துறை தலைமை இயக்குநா் ஷாலினி சிங் திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளாா்.
மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா அறிவுறுத்தலின் பேரிலும், புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் வழிகாட்டுதல் படியும் இந்த நிலை ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக டிஜிபி தெரிவித்தாா்.
காவல் நிலையங்களில் பதிவு செய்யப்படும் முதல் தகவல் அறிக்கை புதுச்சேரி, காரைக்காலில் தமிழில் இருக்கும். மாஹே பகுதியில் மலையாளத்திலும், ஏனாம் பகுதியில் தெலுங்கிலும் இருக்கும்.
சட்ட நடைமுறைகளை உள்ளூா் மக்கள் எளிதாகப் புரிந்து கொள்ளவும், காவல் நிலையங்களை அவா்கள் எளிதில் அணுகும் நோக்கிலும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.