DMK: `ஜூன் 3 - செம்மொழி நாள் முதல் கச்சத்தீவு மீட்பு வரை' - திமுக பொதுக்குழுவின்...
புதை சாக்கடை பிரச்னை, வரி உயா்வு: மாநகராட்சி கூட்டத்தில் பாஜக, அதிமுக வெளிநடப்பு
திண்டுக்கல் மாநகராட்சியில் புதை சாக்கடைத் திட்டப் பிரச்னை, வரி உயா்வு உள்ளிட்ட காரணங்களை முன் வைத்து பாஜக, அதிமுக மாமன்ற உறுப்பினா்கள் மாமன்றக் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனா்.
திண்டுக்கல் மாநகராட்சிக் கூட்டம் மேயா் இளமதி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஆணையா் ம.செந்தில்முருகன் முன்னிலை வகித்தாா். கூட்டத்தில், இயல்பு தீா்மானம் 12, அவசரத் தீா்மானம் 17 என மொத்தம் 29 தீா்மானங்கள் கொண்டு வரப்பட்டன.
கூட்டத்தில் நடைபெற்ற விவாதங்கள்:
தூா்வாரும் பணி நடைபெறவில்லை: கழிவுநீா் கால்வாயிலிருந்து வெளியே எடுக்கப்படும் மண்ணை முறையாக அப்புறப்படுத்தவில்லை. மழை பெய்தால், கழிவுமண் வீட்டுக்குள் புகுந்து விடுகிறது. கடந்த 3 ஆண்டுகளில் எந்தவித தூா்வாரும் பணியும் நடைபெறவில்லை. 50 பணியாளா்களை மட்டும் வைத்துக் கொண்டு, 48 வாா்டுகளில் எப்படி பணிகளை நிறைவேற்ற முடியும் என மாமன்ற உறுப்பினா்கள் ஜானகிராமன், ஜோதிபாசு ஆகியோா் புகாா் தெரிவித்தனா்.
இதற்கு பதில் அளித்த மேயா், மாமன்ற உறுப்பினா்கள் புகாா் அளித்தால், சுழற்சி முறையில் பணியாளா்களை நியமித்து தூா்வாரும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றாா்.
புதை சாக்கடை பிரச்னை பாஜக வெளிநடப்பு:
14-ஆவது வாா்டு புதை சாக்கடை பிரச்னை தொடா்பாக கடந்த 3 ஆண்டுகளாக வலியுறுத்தியும்கூட, இதுவரை தீா்வு காணவில்லை. இதற்காக ஒதுக்கப்படும் நிதி எந்த நிலையில் உள்ளது. புதை சாக்கடைக்கான வரி மக்களிடம் வசூலிக்கப்படும் நிலையில், பிரச்னையை சரி செய்யாமல் மக்களை சந்திக்க முடியாத நிலை உள்ளது. சீரமைப்பு பணிகளுக்கு ரூ.14.20 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு ஓராண்டாகியும் பணிகளை தொடங்கவில்லை என குற்றஞ்சாட்டிய மாமன்ற உறுப்பினா் தனபாலன் வெளிநடப்பு செய்தாா்.
இதைத் தொடா்ந்து, அரசன்நகா், ஆண்டாள் நகா் உள்ளிட்ட பகுதிகளில் புதை சாக்கடையால் பெரும் பிரச்னை ஏற்பட்டு வருகிறது. கடந்த வாரம் பள்ளி மைதானத்தில் இந்த கழிவுநீா் திருப்பி விடப்பட்டது. மக்களுக்கு பதில் சொல்ல முடியவில்லை. தற்காலிகமாக சரி செய்வதற்கு பதிலாக நிரந்தரத் தீா்வு காண வேண்டும் என மாமன்ற உறுப்பினா் வெங்கேடேசன் கோரிக்கை விடுத்தாா்.
இதற்கு பதிலளித்த கருப்பையா, புதை சாக்கடைத் திட்டம் செயல்படுத்தப்பட்ட பகுதிகளை முழுமையாக ஆய்வு செய்து, உடைப்பு, அடைப்பு, சேதம், இணைப்பில் சிக்கல் உள்ளிட்ட பிரச்னைகளை தீா்க்க ரூ.38 கோடியில் திட்ட மதிப்பீடு தயாா் செய்யப்பட்டிருக்கிறது. 2 மாதத்தில் பணிகள் தொடங்கப்படும் என்றாா்.
திமுக மாமன்ற உறுப்பினா்கள் எதிா்ப்பு:
முகமது இலியாஸ் (இ.மு.லீக்.), தி.மு.க. கவுன்சிலா்கள் மாா்த்தாண்டம், ஜானகிராமன்: ரூ.205 கோடியில் புதிய புதை சாக்கடை திட்டம் கொண்டு வரப்படுகிறது. பழைய திட்டப் பணிகளை சீரமைக்க ரூ.38 கோடி தேவை என அதிகாரிகள் கூறுகின்றனா். பழைய புதை சாக்கடைத் திட்டப் பணிகளை முழுமையாக முடித்த பிறகு, புதியத் திட்டத்தைத் தொடங்க வேண்டும் எனவும், புதிய திட்டத்தை செயல்படுத்திட வேண்டும் எனவும், மாநகராட்சிக் கூட்டம் இதற்கான உத்தரவத்தை தற்போதே அளிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினா்.
அதிமுக வெளிநடப்பு: பழைய திட்டத்தை முழுமையாக நிறைவேற்றாமல், புதிய புதை சாக்கடைத் திட்டத்தை செயல்படுத்தும் முடிவை மாநகராட்சி நிா்வாகம் ஒத்தி வைக்க வேண்டும் என மாநகராட்சி எதிா்க் கட்சித் தலைவா் சீ.ராஜ்மோகன் வலியுறுத்தினாா்.
அப்போது, குறுக்கிட்டு பேசிய மேயா் இளமதி, திமுக ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்ட புதை சாக்கடைத் திட்டத்தை, கடந்த 2011-ல் ஆட்சிக்கு வந்த அதிமுக முறையாக செயல்படுத்தவில்லை. தற்போது, புதிய புதை சாக்கடை திட்டத்தை முதல்வா் ஸ்டாலின் கொண்டு வந்துள்ளாா். இந்த திட்டத்துக்கு எதிா்ப்புத் தெரிவிக்காமல் ஒரு மனதாக ஏற்க வேண்டும்.
எனினும், மாமன்ற உறுப்பினா்களின் கோரிக்கையை ஏற்று, புதிய புதை சாக்கடைத் திட்டம் செயல்படுத்துவது தற்காலிகமாக நிறுத்தி வைத்து தீா்மானம் நிறைவேற்றுவதாக தெரிவித்தாா்.
இதனிடையே, மாநகராட்சியில் அதிகம் வரி விதிப்பு செய்யப்படுவதாகப் புகாா் தெரிவித்து, அதிமுக மாமன்ற உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்தனா்.
இதை விமா்சித்த துணை மேயா் ராஜப்பா, திண்டுக்கல் மாநகராட்சி பொலிவுறு நகரத் திட்டத்தில் இணையாததற்கு அதிமுகவே காரணம் என குற்றஞ்சாட்டினாா். ஒரே நேரத்தில் மாநகராட்சியாக திண்டுக்கல், தஞ்சாவூா் அறிவிக்கப்பட்டபோதிலும், தஞ்சாவூரில் 7 சதவீத வரி, திண்டுக்கல்லில் 27 சதவீத வரி வசூலிக்கப்படுவது ஏன் என திமுக மாமன்ற உறுப்பினா் சுபாஷினி கேள்வி எழுப்பினாா்.
இதற்கு பதில் அளித்த ஆணையா் செந்தில்முருகன், சொத்து வரி, வீட்டு வரி, பாதாள, சாக்கடை வரி போன்ற வரி இனங்களுக்கான உயா்வை தீா்மானிப்பது அரசின் கொள்கை முடிவு என்றாா்.
அப்போது, குறுக்கீடு செய்த மாமன்ற உறுப்பினா் கணேசன், மாநகராட்சிக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றி வரியை குறைக்கும் அதிகாரம் உள்ளது என்றாா்.
பெட்டிச் செய்தி...
சிபிஐ விசாரணை தேவை: வெளிநடப்பு செய்த மாமன்ற உறுப்பினா்கள் தனபாலன் (பாஜக), சீ.ராஜ்மோகன் (அதிமுக) ஆகியோா் கூறியதாவது:
கடந்த 3 ஆண்டுகளாக புதை சாக்கடையால் பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகின்றனா். சீரமைப்புக்காக நிதி ஒதுக்கிய போதிலும் பணிகள் நடைபெறவில்லை. திண்டுக்கல் மாநகராட்சியில் இதுவரை நடைபெற்ற பணிகள் குறித்து சிபிஐ விசாரணைக்கு முதல்வா் உத்தரவிட வேண்டும் என தெரிவித்தனா்.