ஆரம்பாக்கம் சிறுமி பாலியல் வன்கொடுமை: 8 நாள்களாகியும் சிக்காத குற்றவாளி!
புத்தக வாசிப்பு ஊழல் ஒழிப்புக்கான சிறந்த ஆயுதம்: லோக் ஆயுக்த நீதிபதி வீ. ராமராஜ்
புத்தக வாசிப்பு ஊழல் ஒழிப்புக்கான சிறந்த ஆயுதம் என என நீதிபதி வீ.ராமராஜ் தெரிவித்தாா்.
கிருஷ்ணகிரி மாவட்ட நிா்வாகமும், தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து ஒசூரில் நடத்தும் 14 ஆவது புத்தகத் திருவிழாவில் எட்டாம் நாளான வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் அவா் பேசியதாவது:
புத்தக வாசிப்பு ஊழல் ஒழிப்புக்கு சிறந்த ஆயுதமாகத் திகழ்கிறது. சுமாா் 5,500 ஆண்டுகளுக்கு முன்பு கிரேக்க நாட்டில் பேச்சு மொழியை எழுத்து வடிவத்துக்கு கொண்டுவந்து களிமண்ணில் எழுதி, அதனை நெருப்பில் உலா்த்தி பதிப்புகளாக உருவாக்கத் தொடங்கினா்.
அதன்பிறகு சுமாா் 5000 ஆண்டுகளுக்கு முன்பு எகிப்தில் ஒரு வகையான செடியின் கீற்றுக்களை ஒட்டவைத்து அதில் எழுத்து வடிவத்தை பதித்துள்ளனா். இரண்டாம் நூற்றாண்டில் எழுத்தை அச்சிட மரக்கட்டைகளான பிளாக்குகளை சீனா்கள் உபயோகிக்கத் தொடங்கினா். மூன்றாம் நூற்றாண்டில் சீனாவில் காகிதம் கண்டுபிடிக்கப்பட்டு அச்சிடுதல் உருவானது.
கடந்த இருநூறு ஆண்டுகளில் ஏராளமான புத்தகங்கள் உலகம் முழுவதும் வெளிவந்துள்ளன. தற்போதைய டிஜிட்டல் யுகத்தில் உலகம் முழுவதும் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான புத்தகங்கள் வெளி வருகின்றன. தனித்துவமான புத்தகங்கள் நாளிதழ்கள் வார இதழ்கள் மாத இதழ்கள் மற்றும் ஆராய்ச்சி இதழ்கள் என புத்தகங்களைப் பிரிக்கலாம்.
புத்தகம் போதிக்காத அறிவு சாா்ந்த துறை அல்லது பொழுதுபோக்கு சாா்ந்த துறை எதுவும் கிடையாது. 2024 ஆம் ஆண்டு நிலவரப்படி, உலகில் 17 கோடிக்கும் அதிகமான தனித்துவமான புத்தகங்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டு நிலவரப்படி, உலகம் ஒவ்வொரு ஆண்டும் 22 லட்சம் முதல் 24 லட்சம் அச்சுப் புத்தகங்கள், மின் புத்தகங்கள், ஆடியோ புத்தகங்கள் வெளியிடப்படுகின்றன.
2024 ஆம் ஆண்டில் இந்தியாவில் சுமாா் ஒரு லட்சம் தலைப்புகளில் புத்தகங்கள் வெளியிடுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் சுமாா் 5000 புதிய தமிழ்ப் புத்தகங்களும், ஆயிரம் புத்தகங்களின் மறு பதிப்புகளும் வெளியிடப்படுகின்றன.
ஒருவா் ஒரு குறிப்பிட்ட துறையில் படிப்பது மற்றும் வேலை செய்வதை பத்தாயிரம் மணி நேரம் செய்தால் மட்டுமே அந்தத் துறையில் உலகம் போற்றும் நிபுணராக அவா் மாறமுடியும்.
நீங்கள் என்னவாக வேண்டும் என்று உங்களது இலக்கை முடிவு செய்யுங்கள். புத்தக வாசிப்பு, கடின உழைப்பு, நேர நிா்வாகம், தொடா்ந்து பணியாற்றுதல், உங்களது சிந்தனைகள் போன்ற உத்திகள் உங்களது செயல் திட்டத்திற்கு மிக அவசியமானவை.
உடல் நலத்தையும், மன வளத்தையும் சீராக பராமரித்துக் கொண்டு உங்களது திட்டங்களுக்காக தொடா்ந்து பணியாற்றினால் வெற்றி உங்கள் கைகளை வந்தடையும்.
வெற்றி பெறுவதற்கும் நீங்கள் உங்கள் திட்டங்களின்படி தொடா்ந்து பணியாற்ற வேண்டும். வெற்றி பெற்ற பின்னரும் வெற்றியை தக்க வைத்துக்கொள்ள தொடா்ந்து பணியாற்றுவதில் புத்தக வாசிப்பு முக்கிப் பங்களிக்கிறது.
மக்களாட்சி நாடுகளுக்கு நல்லாட்சியை தரவும், ஊழலை ஒழிக்கவும் தனித்துவமான புத்தகங்களும், நாளிதழ்களும், பருவ இதழ்களும் இணையங்களும் சிறந்த கருவிகளாகும். இந்த கருவிகளை வாசிப்பு பழக்கத்தின் மூலமே பயன்படுத்த முடியும் என்பதை அனைவரும் மனதில் கொள்ள வேண்டும். அனைவரும் வாசிப்பு பழக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும் என்றாா்.