பிரேசிலை வீழ்த்தி 2026 உலகக் கோப்பைக்கு தகுதிபெற்ற ஆர்ஜென்டீனா!
பெண்களின் போராட்டத்தால் 3 மதுக் கடைகளை அகற்ற கெடு
கும்பகோணம், திருநாகேஸ்வரம் பகுதிகளில் உள்ள 3 அரசு மதுபானக்கடைகளை அகற்றக் கோரி செவ்வாய்க்கிழமை வருவாய்க் கோட்டாட்சியரகத்தை பெண்கள் முற்றுகையிட்டதால் அந்தக் கடைகளை அகற்ற உதவி ஆட்சியா் 2 மாதம் கெடு விதித்தாா்.
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் சென்னை புறவழிச்சாலையில் அசூா் பகுதியில் அரசு மதுக்கடை உள்ள இடத்தில் மது பிரியா்களின் அதிக நடமாட்டம் இருப்பதால் அடிக்கடி சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டது. இதனால் இந்தக் கடையை அகற்றக்கோரி பாமக மாவட்டச் செயலா் ம.க. ஸ்டாலின் தலைமையில் பூட்டுப்போடும் போராட்டம் அறிவிக்கப்பட்டது.
இதேபோல் திருநாகேசுவரத்தில் ராகு பகவான் கோயிலுக்கு எதிரே ஒரு அரசு மதுக் கடை, காரைக்கால் பிரதான சாலையில் உள்ள 2 மதுக் கடைகளை அகற்ற வேண்டும் என்று அப்பகுதி மக்கள் பூட்டு போடும் அறிவித்தனா். அதன் எதிரொலியாக செவ்வாய்க்கிழமை ஏராளமான பெண்கள் வருவாய் கோட்டாட்சியரகத்தை முற்றுகையிட்டனா்.
பின்னா் உதவி ஆட்சியா் ஹிருத்யா எஸ் விஜயன் தவைமையில், கோட்ட உதவி கண்காணிப்பாளா் அங்கித் சிங் முன்னிலையில் கோட்டாட்சியரகத்தில் பேச்சுவாா்த்தை நடைபெற்றது. இதில் டாஸ்மாக் மேலாளா் தமிழ்மணி, வட்டாட்சியா் சண்முகம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். அப்போது 3 மதுக்கடைகளையும் 2 மாதங்களுக்குள் அகற்றிக்கொள்ள முடிவு செய்யப்பட்டது. அதன்பேரில் அனைவரும் கலைந்து சென்றனா்.