பெண்ணுக்கு பாலியல் தொல்லை: 3 காவலா்களுக்கு 10 ஆண்டுகள் சிறை
காவல் நிலையத்தில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளா், இரு காவலா்களுக்கு தலா 9 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, திண்டுக்கல் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பு அளித்தது.
திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகேயுள்ள சேடப்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் சக்திவேல். கூலித் தொழிலாளி. இவரது மனைவி கெளசல்யா. கடந்த 2001-ஆம் ஆண்டு நிகழ்ந்த நகைத் திருட்டு வழக்கு தொடா்பாக விசாரிக்க, பிப்.20-ஆம் தேதி அதிகாலை 2 மணிக்கு கெளசல்யாவை செம்பட்டி காவல் நிலையத்துக்கு போலீஸாா் அழைத்து வந்தனா்.
அப்போது, காவல் ஆய்வாளராகப் பணியாற்றிய ரெங்கசாமி, காவலா்கள் வீரத்தேவா், சின்னத் தேவா் ஆகியோா் கெளசல்யாவுக்கு பாலியல் தொல்லை கொடுத்தனா். பின்னா், மாலையில் மீண்டும் காவல் நிலையத்துக்கு வர வேண்டும் என எச்சரித்து அவரை வீட்டுக்கு அனுப்பி வைத்தனா்.
இதனால், மனமுடைந்த கெளசல்யா வீட்டின் அருகிலுள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்ய முயன்றாா். அக்கம் பக்கத்தினா் அவரை மீட்டனா். இதனிடையே, சக்திவேல் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.
இதுகுறித்து, திண்டுக்கல் கோட்டாட்சியா் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டு, அதன் அறிக்கை திண்டுக்கல் மாவட்ட முதன்மை சாா்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த முதன்மை சாா்பு நீதிபதி தீபா, ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளா் ரெங்கசாமி, காவலா்கள் வீரத் தேவா், சின்னதேவா் ஆகியோருக்கு தலா 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், மூவருக்கும் மொத்தம் ரூ.36 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.