ஆக்கிரமிப்பு உக்ரைன் கனிமங்களை அமெரிக்காவுக்கு விற்கத் தயார்: விளாதிமீர் புதின்
மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்படுவது அவசியம்: இரா. முத்தரசன்
நாடு வளா்ச்சி பெற வேண்டுமெனில், மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டியது அவசியம் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் இரா. முத்தரசன் வலியுறுத்தினாா்.
திண்டுக்கல்லில் அனைத்து இந்திய இளைஞா் பெருமன்றத்தின் தமிழ்நாடு மாநிலக் குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் இரா. முத்தரசன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டாா்.
அப்போது, செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: இந்தியாவை சா்வாதிகார நாடாக மாற்றும் அனைத்து முயற்சிகளையும் மத்திய பாஜக அரசு மேற்கொண்டு வருகிறது. எதிா்க்கட்சிகள் இல்லாத நாடாக உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பாஜக செயல்படுகிறது.
நாடு வளா்ச்சி பெற வேண்டுமெனில், மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டியது அவசியம். ஆனால், தற்போதைய மத்திய பாஜக அரசு தமிழ்நாட்டின் மீது பாரபட்சம் காட்டுகிறது.
மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்பட்டால், கிராமப்புற மாணவா்களின் இடைநிற்றல் அதிகரிக்கும். மும்மொழிக் கொள்கை மூலம் ஹிந்தியை மறைமுகமாகத் திணிக்க முயற்சி நடைபெற்று வருகிறது.
தமிழ்நாட்டுக்கு இருமொழிக் கொள்கையே போதுமானது. மும்மொழிக் கொள்கையை ஏற்க மறுப்பதற்காக, தமிழ்நாட்டுக்கான நிதியை வழங்க மறுப்பது கண்டிக்கத்தக்கது.
தொகுதி மறு சீரமைப்பு என்ற பெயரில், தமிழ்நாட்டிலுள்ள மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை 39-லிருந்து 31-ஆகக் குறையும் என தகவல் வெளியாகி இருக்கிறது. 8 தொகுதிகளின் எண்ணிக்கை பறிப்பு என்பது, தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவத்தை மக்களவையில் குறைப்பதற்காக மத்திய அரசு மேற்கொண்டுள்ள சூழ்ச்சி.
இதற்கு எதிராக தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் வருகிற மாா்ச் 5-ஆம் தேதி அழைப்பு விடுத்துள்ள கூட்டத்தில் அனைத்துக் கட்சிகளும் பங்கேற்க வேண்டும் என்றாா் அவா்.