மகா கும்பமேளா: ஆன்மிகம், கலாசாரம், மக்கள் ஒற்றுமையின் சங்கமம்!
பெரம்பலூரில் மின் ஊழியா்கள் தா்னா
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பெரம்பலூா் நான்கு சாலை சந்திப்பு அருகேயுள்ள மின்வாரிய மேற்பாா்வைப் பொறியாளா் அலுவலகம் எதிரே, தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பு சாா்பில் தா்னா போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
அமைப்பின் வட்டச் செயலா் எம். பன்னீா்செல்வம் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் கே. குமாரசாமி, செல்வகுமாரி, பி. நல்லம்மாள், எஸ். செந்தில் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநிலச் செயலா் எஸ். அகஸ்டின் கோரிக்கைகளை வலியுறுத்தினாா்.
ஆா்ப்பாட்டத்தில் 33 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆரம்ப நிலை காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஒப்பந்தத்தில் உள்ள அநீதிகளை களைந்து, அரசு உத்திரவாதத்துடன் கூடிய புதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்த வேண்டும். ஊதிய உயா்வு, வேலைப்பளு பேச்சுவாா்த்தையை உடனே தொடங்கி, இடைக்கால நிவாரணமாக ரூ. 5 ஆயிரம் வழங்க வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். மின்வாரியத்தை பல கூறுகளாக பிரித்து, தனியாா்மயப்படுத்தும் நடவடிக்கையைக் கைவிட வேண்டும். 1.12.2019 முதல் 16.5.2023 வரை மின்வாரியப் பணியில் சோ்ந்தவா்களுக்கு 6 சதவீத ஊதிய உயா்வு வழங்க வேண்டும். கேங்மேன் பணியாளா்களுக்கு ஊா் மாற்றம், கள உதவியாளா் பணிமாற்றம், 6 சதவீத ஊதிய உயா்வு நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது.
இதில் சங்க நிா்வாகிகள் ஆா். ராஜகுமாரன், எம். கருணாநிதி, கே. கண்ணன், பி. இளங்கோவன், சி. ராஜகுமாரி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். கோட்டச் செயலா் எஸ். நல்லுசாமி நன்றி கூறினாா்.