பெரியார் பல்கலை. முறைகேடு வழக்கு: துணை வேந்தர் ஜெகநாதன் விசாரணைக்கு ஆஜர்!
பெரியார் பல்கலைக்கழக முறைகேடு வழக்கில் துணை வேந்தர் ஜெகநாதன் உதவி காவல் ஆணையர் முன்பு ஆஜரானார்.
பல்கலை கழக விதிமுறைகளை மீறி சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பூட்டர் என்ற தனியார் அமைப்பை தொடங்கி அதன் மூலம் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஜெகநாதன் மற்றும் முன்னாள் பதிவாளர் தங்கவேலு உள்ளிட்ட நான்கு பேர் மீது பல்கலைக்கழக தொழிலாளர் சங்கத்தினர் புகாரளித்தனர்.
அந்தப் புகாரின் அடிப்படையில் சேலம் மாநகர காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு முறைகேடு மற்றும் புகார் அளித்தவரை ஜாதியின் பெயரை சொல்லி திட்டியது பல்வேறு பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து துணைவேந்தர் ஜெகநாதனை கைது செய்தனர்.
இதனைத் தொடர்ந்து இந்த வழக்கில் துணைவேந்தர் ஜெகநாதன் நிபந்தனை ஜாமின் பெற்றதோடு வழக்கு விசாரணைக்கு தடையானையும் பெற்றிருந்தார்.
இதனை எதிர்த்து மாநகர காவல் துறையினர் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ததை தொடர்ந்து வழக்கு விசாரணைக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கியதோடு காவல்துறையினர் விசாரணை மேற்கொள்ளலாம் என்றும் இந்த வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருந்தது.
இந்த வழக்கு விசாரணையை மீண்டும் தொடங்கிய மாநகர காவல் துறை உதவி ஆணையாளர் ரமணி ரமா லட்சுமி, இந்த வழக்கு தொடர்புடைய சாட்சிகளிடம் தனித்தனியாக சம்மன் அனுப்பி சாட்சிகளின் கருத்துகளை பதிவு செய்துள்ளார்.
இந்த நிலையில் இந்த முறைகேடு வழக்கு தொடர்பாக பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதனிடம் விசாரணை மேற்கொள்வதற்காக உதவி ஆணையர் ரமணி ராம லட்சுமி நேற்று துணைவேந்தர் நேரில் ஆஜர் ஆக வேண்டும் என்று சம்மன் அனுப்பினார்.
இதனைத் தொடர்ந்து துணைவேந்தர் ஜெகநாதன் இன்று காலை 11 மணியளவில் சூரமங்கலம் காவல் நிலைய வளாகத்தில் உள்ள உதவியை ஆணையாளர் அலுவலகத்தில் நேரில் ஆஜராகினார்.
நேரில் ஆஜரான துணைவேந்தர் ஜெகநாதனிடம் உதவி ஆணையாளர் உள்ளிட்ட காவல் அதிகாரிகள் வழக்கு தொடர்பான பல்வேறு கருத்துக்களை கேட்டு அறிந்து அதனை விடியோவில் பதிவு செய்தனர்.
சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற இந்த விசாரணையின் தொடர்ச்சி நாளையும் நடைபெறும் என்று தெரிய வருகிறது. இந்த நிலையில் துணைவேந்தர் ஜெகநாதனுக்கு லஞ்ச ஒழிப்பு காவல் துறையினரும் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
வரும் திங்கட்கிழமை காலை லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் கூறப்படுகிறது.
பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாடு இன்று தமிழக ஆளுநர் தலைமையில் நடைபெற உள்ள நிலையில் பெரியார் பல்கலைக்க துணைவேந்தர் காவல் துறை முன்பு ஆஜராகி விளக்கம் அளித்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிக்க:துணைவேந்தர் மாநாடு அரசுக்கும் துணைவேந்தர்களுக்கும் நெருக்கடியை உருவாக்கும்! - திருமாவளவன்