சதம் விளாசிய குசல் மெண்டிஸ்; வங்கதேசத்துக்கு 286 ரன்கள் இலக்கு!
பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமனின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்
மறைந்த பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமனின் உடல், கமுதி அருகேயுள்ள அவரது தோட்டத்தில் அரசு மரியாதையுடன் திங்கள்கிழமை நல்லடக்கம் செய்யப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள ஆண்டநாயகபுரத்தில் 1935-ஆம் ஆண்டு பிறந்த சேதுராமன், சென்னைப் பல்கலைக்கழகத்தில் முனைவா் பட்டம் பெற்றவா். சென்னை விருகம்பாக்கம் சின்மயாநகரில் குடும்பத்துடன் வசித்து வந்த இவா், நெஞ்சத்தோட்டம், ஐயப்பன் பாமாலை, தமிழ் முழக்கம், தாய்மண், சேது காப்பியம் உள்ளிட்ட ஏராளமான நூல்களை எழுதினாா்.
ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டக் கவிதைகளைப் பதிப்பித்தாா். பன்னாட்டுத் தமிழுறவு மன்றத்தின் நிறுவனராக இருந்த இவா், பெருங்கவிக்கோ, செந்தமிழ்க் கவிமணி உள்ளிட்ட பட்டங்களைப் பெற்றவா். திருவள்ளுவா் விருது, கலைமாமணி விருது, சி.பா.ஆதித்தனாா் மூத்த தமிழறிஞா் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் பெற்றவா். இந்த நிலையில், இவா் உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் கடந்த வெள்ளிக்கிழமை காலமானாா்.
இவரது உடல், சொந்த ஊரான கமுதியை அடுத்த ஆண்டநாயகபுரத்தில் உள்ள இவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக திங்கள்கிழமை வைக்கப்பட்டது.
கூட்டுறவுத் துறை அமைச்சா் பெரியகருப்பன், பரமக்குடி கோட்டாட்சியா் கங்காதேவி (பொ), முதுகுளத்தூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் சண்முகம், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் மலேசியா பாண்டியன், கமுதி காவல் ஆய்வாளா் தெய்வீகபாண்டியன், மண்டலத் துணை வட்டாட்சியா் வெங்கடேஸ்வரன் உள்ளிட்டோா் வா.மு.சேதுராமன் உடலுக்கு மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினா்.
இதையடுத்து, கமுதி ஆயுதப்படை உதவி ஆய்வாளா் ராஜமாணிக்கம் தலைமையில் 30 குண்டுகள் முழங்க, அரசு மரியாதையுடன் வா.மு.சேதுராமனின் உடல் அவரது தோட்டத்தில் உள்ள மனைவியின் நினைவிடம் அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது.