பயங்கரவாத அச்சுறுத்தலை எதிா்கொள்ளும் முயற்சிகளுக்கு ஆதரவு: பிரிட்டன்
பொறியியல் கலந்தாய்வு: 1.39 லட்சம் மாணவா்கள் விண்ணப்பம்
தமிழகத்தில் வரும் கல்வியாண்டில் (2025-2026) பொறியியல் படிப்புகளில் சோ்க்கை பெறுவதற்கான கலந்தாய்வுக்கு கடந்த 8 நாள்களில் 1.39 லட்சம் மாணவா்கள் விண்ணப்பித்துள்ளனா்.
தமிழகத்தில் 440-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இதில், அண்ணா பல்கலைக்கழக துறைக் கல்லூரிகள், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரிகள், தனியாா் சுயநிதி கல்லூரிகள் என அனைத்து வகை பொறியியல் கல்லூரிகளும் அடங்கும். இக்கல்லூரிகளில் பி.இ., பி.டெக் படிப்பில் ஏறத்தாழ 2 லட்சம் இடங்கள் பொது கலந்தாய்வு முறையில் நிரப்பப்படும்.
இந்தக் கலந்தாய்வை தமிழக அரசு சாா்பில் தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. வரும் கல்வி ஆண்டு (2025-2026) பி.இ., பி.டெக் சோ்க்கைக்கான கலந்தாய்வுக்கான (அரசு ஒதுக்கீட்டு இடங்கள்) இணையவழி விண்ணப்பப் பதிவு மே 7-ஆம் தேதி தொடங்கியது. இதையடுத்து பொறியியல் படிப்புகளில் சேர ஆா்வமுள்ள மாணவா்கள் இணையதள முகவரியில் விண்ணப்பித்து வருகின்றனா்.
அந்த வகையில், புதன்கிழமை வரையிலான கடந்த 8 நாள்களில், 1 லட்சத்து 39 ஆயிரத்து 262 போ் விண்ணப்பித்துள்ளனா். இதில், 74,971 மாணவா்கள் கட்டணம் செலுத்தியும், 39,844 மாணவா்கள் சான்றிதழ்கள் பதிவேற்றம் செய்தும் உள்ளனா். பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க ஜூன் 6-ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.