போதை மாத்திரைகள் விற்ற நாகாலாந்து வாலிபர் கைது
பெங்களூருவில் இருந்து போதை மாத்திரைகளஅ வாங்கி வந்து கோவையில் விற்பனை செய்த நாகாலாந்து வாலிபரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
கோவை மாநகரப் பகுதியில் போதைப்பொருள் விற்பனையை தடுக்க காவல் துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக வட மாநிலங்களில் இருந்து உயர்ரக கஞ்சா போதை மாத்திரைகள் மற்றும் உயர்ரக போதைப் பொருட்கள் கடத்தப்பட்டு வருவதை தடுப்பதற்காக ரயில் நிலையங்கள் மற்றும் காவல் துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கோவை அடுத்த வடகோவை மேம்பாலம் பகுதியில் இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களை குறி வைத்து போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக ஆர்.எஸ் புரம் காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போதை தடுப்புப் பிரிவு போலீஸார், அப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர். அவர் முன்னுக்கு, பின் முரணாக பதில் அளித்ததால் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு அவரிடம் விசாரணை மேற்கொண்டதில், அவர் நாகலாந்து மாநிலம் திமாபூர் பகுதியைச் சேர்ந்த லென்ஜாங்கம் என்பதும், அவர் வாடகைக்கு மோட்டார் சைக்கிள் ஓட்டி வருவதும் தெரிய வந்தது. அவருக்கு போதை மாத்திரை விற்பனை செய்யும் கும்பலுடன் தொடர்பு ஏற்பட்டதால் அடிக்கடி பெங்களூரூ மற்றும் மும்பைக்கு சென்று குறைந்த விலையில் போதை மாத்திரைகளை வாங்கி வந்து கோவையில் கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களை குறி வைத்து அதிக விலைக்கு விற்றதும் தெரிய வந்தது. இதையடுத்து அவரத்து பையில் உடமைகளை சோதனை செய்ததில் 36 போதை மாத்திரைகள் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அவற்றைப் போலீஸாா் பறிமுதல் செய்து அவரையும் கைது செய்தனா்.