உலகின் மிகப்பெரிய நீர்வீழ்ச்சி கண்டுபிடிப்பு: கடலுக்கு அடியில் மறைந்திருக்கும் அ...
ரூ.9 கோடி இழப்பீடு கோரி ரவி மோகன் வழக்கு: படத் தயாரிப்பு நிறுவனம் பதிலளிக்க உத்தரவு
சென்னை: குறித்த காலத்தில் படப்பிடிப்பை துவங்காத காரணத்தால் தனக்கு ஏற்பட்ட இழப்புக்கு ரூ.9 கோடி இழப்பீடு வழங்க உத்தரவிடக் கோரி நடிகர் ரவி மோகன் தாக்கல் செய்த மனுவுக்கு தயாரிப்பு நிறுவனம் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் ரவி மோகன் தாக்கல் செய்த மனுவில், கோவையைச் சேர்ந்த பாபி டச் கோல்ட் யுனிவர்சல் பிரைவேட் லிமிடெட் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் 2 திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
அந்த ஒப்பந்தத்தின்படி, 2025 ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை 80 நாள்கள் கால்ஷீட் ஒதுக்கி கொடுத்திருந்தேன். ஆனால், இதுவரை படப்பிடிப்பைத் தொடங்கவில்லை. இதன் காரணமாக தன்னால் வேறு படங்களில் நடிக்க முடியாமல் போனது.
பின்னர் மார்ச் முதல் ஜூன் மாதம் வரை நாள்கள் இந்த தயாரிப்பு நிறுவனத்துக்கு நாள்கள் ஒதுக்கிய போதும், படப்பிடிப்பு நடத்தவில்லை. இதனால் ஒப்பந்தம் காலாவதியாகிவிட்டது.
எனவே அந்தப் படத்திலிருந்து விலகிவிட்டேன். இதுகுறித்து தயாரிப்பாளருக்கு தகவல் தெரிவித்தேன். முன் பணமாக கொடுத்த ரூ.6 கோடியை திருப்பித் தரும்படி தயாரிப்பாளர் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
இந்த இடைப்பட்ட காலத்தில் பாபி டச் கோல்ட் யுனிவர்சல் பிரைவேட் லிமிடெட் தயாரித்த 'சென்னை சிட்டி கேங்ஸ்டர்' படம் மற்றும் இந்நிறுவனம் தயாரிக்கும் வேறு படங்களை விற்கவும், வெளியிடவும் தடை விதிக்க வேண்டும். மேலும் தனக்கு ஏற்பட்ட இழப்புக்கு ரூ.9 கோடி இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது ரவி மோகன் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் கார்த்திகைபாலன், முன்பணத்தை திருப்பி கொடுக்க நடிகர் ரவி மோகன் தயாராக உள்ளார்.
அடுத்த படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்த பின் அத்தொகையை கொடுப்பதாகக் கூறினார். ஆனால், 7 நாள்களில் முன்பணத்தை திருப்பித்தர வேண்டும் என கேட்கின்றனர். இதனால் வேறு படங்களில் நடிக்க முடியவில்லை, என வாதிட்டார்.
அப்போது படத் தயாரிப்பு நிறுவனம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், இந்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல. ஒப்பந்தத்தை மீறி நடிகர் ரவி மோகன், 'பராசக்தி' படத்தில் நடித்துள்ளார் எனத் தெரிவித்தார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இந்த மனுவுக்கு தயாரிப்பு நிறுவனம் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஜூலை 23-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். அன்றைய தினம், தயாரிப்பு நிறுவனம் தாக்கல் செய்த வழக்குடன், நடிகர் ரவி மோகன் மனுவையும் விசாரணைக்கு பட்டியலிடுமாறு நீதிபதி பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.