குடிமைப் பணி தோ்வு ஆா்வலா்கள் உயிரிழந்த விவகாரம்: பயிற்சி மையத்தின் சிஇஓ, ஒருங...
மகா கும்பமேளாவில் புனித நீராடிய உத்தரகண்ட் முதல்வர்!
பிரயாக்ராஜில் நிகழ்ந்துவரும் கும்பமேளாவில் உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி குடும்பத்துடன் புனித நீராடினார்.
உத்தரப் பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நடைபெற்று வருகிறது. பெளஷ பெளர்ணமியையொட்டி ஜனவரி 13ஆம் தேதி தொடங்கிய இந்நிகழ்வு, பிப்ரவரி 26ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, முதல்வர் யோகி ஆதித்யநாத், எதிர்க்கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் வெவ்வேறு நாள்களில் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினர்.
இந்தநிலையில், இன்று காலை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு புனித நீராடிய நிலையில், உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி குடும்பத்தோடு புனித நீராடியுள்ளார்.
இதுதொடர்பாக அவரின் எக்ஸ் பதிவில்,
2025 மகா கும்பமேளாவின்போது கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி மூன்று புனித நதிகளும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் தாய், மனைவி மற்றும் மகனுடன் நீராடியது எனக்கு கிடைத்த பெரும் பாக்கியம்.
மறக்க முடியாத தருணம். மூன்று பண்டைய நதிகளின் சங்கமத்தில் புனித நீராடியப் பிறகு ஆன்மிக தூய்மை மற்றும் தெய்வீகத்தின் தனித்துவமான அனுபவத்தைப் பெற்றதாகக் கூறினார்.
ஹரித்வாரில் 2027ல் நடைபெறவுள்ள கும்பமேளாவிற்கான ஏற்பாடுகள் குறித்து பேசிய அவர், பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவைப் போல வரலாற்று சிறப்புமிக்கதாக மாற்ற திட்டமிடல் நடந்து வருகிறது. பக்தர்களுக்கு தெய்வீக அனுபவத்தை உறுதி செய்வதற்காக அனைத்து சாத்தியமான வசதிகளும் வழங்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.
மகா கும்பமேளா பல நூற்றாண்டுகளாக சநாதன தர்மத்தின் ஆன்மீக மற்றும் கலாசார முக்கியத்துவத்தின் மூலம் கோடிக்கணக்கான மக்களை மதம், கலாசாரத்துடன் இணைத்து வருகிறது,
பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் புனித நீராட என் தாயாரை அழைத்துச் செல்லும் அதிர்ஷ்டம் எனக்குக் கிடைத்தது. என் வாழ்வில் வார்த்தைகளால் விவரிக்க முடியாத விலைமதிப்பற்ற மற்றும் உணர்ச்சிப்பூர்வமான தருணங்களில் இதுவும் ஒன்று. என் இதயத்தில் என்றென்றும் பதிந்திருக்கும் என்று தாமி கூறினார்.
மேலும், தெலங்கானா சாலைகள் மற்றும் கட்டடங்கள் அமைச்சர் கோமதிரெட்டி வெங்கட் ரெட்டி திங்கள்கிழமை புனித நீராடினார்.