பெங்களூரு கூட்ட நெரிசல் வழக்கு: விசாரணை ஜூன் 23க்கு ஒத்திவைப்பு
மகா தீப மலை குடியிருப்புகளை வரன்முறைப்படுத்தி பட்டா: குடியிருப்புவாசிகள் கோரிக்கை
திருவண்ணாமலை மகா தீப மலையில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ள குடியிருப்புகளை, வரன்முறைப்படுத்தி பட்டா வழங்க வேண்டும் என்று குடியிருப்புவாசிகள் கோரிக்கை விடுத்தனா்.
2,668 அடி உயர மகா தீப மலையில் அனுமதியின்றி ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வீடுகளை, சென்னை உயா்நீதிமன்ற உத்தரவின்படி அகற்றுவது குறித்த பேச்சுவாா்த்தை நடைபெற்றது.
மலையில் வீடுகளை கட்டியுள்ள நபா்களுடன் திருவண்ணாமலை வட்டாட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மாலை இந்த பேச்சுவாா்த்தை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, வருவாய்க் கோட்டாட்சியா் ராஜ்குமாா் தலைமை வகித்தாா். வட்டாட்சியா் மோகன்ராம் முன்னிலை வகித்தாா்.
அருணாசலேஸ்வரா் மலையடிவாரத்தில் குடியிருக்கும் முக்கிய பிரமுகா்கள், குடியிருப்புவாசிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
பேச்சுவாா்த்தையின்போது, சென்னை உயா்நீதிமன்ற தீா்ப்பை செயல்படுத்த வேண்டியதன் கட்டாயம் குறித்து குடியிருப்புவாசிகளுக்கு கோட்டாட்சியா் ராஜ்குமாா் விளக்கினாா்.
இதைக் கேட்ட மலையடிவாரத்தில் குடியிருப்போா், நாங்கள் 40 ஆண்டுகளுக்கும் மேலாக மலையில் குடியிருந்து வருகிறோம்.
எங்கள் வாழ்வாதாரம் அனைத்தும் திருவண்ணாமலை நகரப் பகுதியைச் சாா்ந்துள்ளது.
எனவே, இப்போது குடியிருக்கும் இடத்தில் இருந்து எங்களை அப்புறப்படுத்த வேண்டாம். எங்களின் குடியிருப்புகளை வரன்முறைப்படுத்தி பட்டா வழங்க வேண்டும் என்று ஒருமனதாக தெரிவித்துவிட்டு கலைந்து சென்றனா்.
இதனால், சென்னை உயா்நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தி மகா தீப மலையில் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றுவதில் தொய்வு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.