சிறுமி பாலியல் வன்கொடுமை : இளைஞருக்கு 15 ஆண்டுகள் சிறை
திருவண்ணாமலை அருகே 17 வயது சிறுமியை காதலிப்பதாக் கூறி, பாலியல் வன்கொடுமை செய்ததாக இளைஞருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் வட்டம், காந்தப்பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் ரவி மகன் மணிகண்டன் (19).
இவா், திருவண்ணாமலை வட்டம், இனாம்காரியந்தல் பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுமியை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசை வாா்த்தை கூறி கடந்த 18.6.2018 அன்று கடத்திச் சென்றாராம்.
மேலும் சாத்தனூா் அணை, திருப்பதி போன்ற இடங்களுக்கு சிறுமியை அழைத்துச் சென்ற மணிகண்டன், செங்கம் வட்டம், குப்பநத்தம் அடுத்த கிளியூரில் உள்ள தனது நண்பா் வீட்டில் அவரை தங்கவைத்தாராம். அப்போது, விருப்பத்துக்கு மாறாக அவரை கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்தாராம்.
இதுகுறித்து, திருவண்ணாமலை கிராமிய போலீஸாா் வழக்குப் பதிந்து மணிகண்டனை கைது செய்தனா். இந்த வழக்கு திருவண்ணாமலையில் உள்ள மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை வழக்கை விசாரித்த நீதிபதி சுஜாதா, மணிகண்டனுக்கு 15 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையுடன் ரூ.1,000 அபராதம் விதித்து உத்தரவிட்டாா். அபராதத் தொகையை கட்டத் தவறினால் மேலும் 3 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டாா். இதையடுத்து போலீஸாா் மணிகண்டனை அழைத்துச் சென்று வேலூா் மத்திய சிறையில் அடைத்தனா்.