பிரேசிலை வீழ்த்தி 2026 உலகக் கோப்பைக்கு தகுதிபெற்ற ஆர்ஜென்டீனா!
மஞ்சள் தேமல் நோய் பாதிப்பு: வம்பன் உளுந்து பயிரிட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வலியுறுத்தல்
திருச்சி மாவட்டத்தில் வம்பன் ரக உளுந்து பயிரிட்ட விவசாயிகளுக்கு 90 விழுக்காடு மகசூல் இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும், உரிய இழப்பீடு வழங்கவும் கோரிக்கை விடுத்துள்ளனா்.
திருச்சி மாவட்டத்தில் தமிழக அரசின் வேளாண்மைத்துறை மூலம் விநியோகம் செய்யப்பட்ட வம்பன் 8, வம்பன் 10 ரக உளுந்து விதைகளை கொள்முதல் செய்து பயிரிட்ட நிலப்பரப்பில் 90 விழுக்காடு மஞ்சள் தேமல் நோய் தாக்கியுள்ளது. பூக்கும் தருணத்தில் ஏற்பட்டுள்ள இந்த நோய் பாதிப்பு காரணமாக மகசூல் இழப்புக்கு ஆளாகியுள்ளனா் விவசாயிகள்.
இதுதொடா்பாக, தமிழ் மாநில காங்கிரஸ் விவசாய அணியின் மண்டலத் தலைவா் ந. ராஜேந்திரன் மேலும் கூறியதாவது: மணிகண்டம் வட்டாரத்தில் மட்டும் 5 டன் வம்பன் ரக விதைகளை விவசாயிகள் கொள்முதல் செய்து பயிரிட்டுள்ளனா். அல்லித்துறை பகுதியில் இரண்டரை டன் கொள்முதல் செய்து பயிரிட்டனா்.
ஆனால், பூக்கும் தருணத்தில் 90 விழுக்காடு பயிா்கள் மஞ்சள் தேமல் நோய் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. வெள்ளை ஈ மூலம் பரவும் இந்த நோயானது மாவட்டத்தில் உள்ள 14 வட்டாரங்களிலும் பயிரிட்ட உளுந்துப் பயிா்களை பெருமளவு சேதப்படுத்தியுள்ளது. வம்பன் ரக விதைகள் திருச்சி மாவட்டத்தில் உள்ள களிமண், வண்டல் மண், மணல் போன்ற நிலப்பரப்புக்கு ஏற்றதல்ல.
இந்த ரகத்தை பயிரிட்ட ஆயிரக்கணக்கான ஏக்கா் நிலங்கள் கடும் மகசூல் இழப்பை சந்திக்கும் நிலை உருவாகியுள்ளது. தற்போதைய சூழலில் நோயைக் கட்டுப்படுத்த மருந்துகள் தெளித்தும் பயனில்லை. பயிா்கள் வீணாகிவிட்டன.
எனவே, வேளாண்மைத்துறை, வருவாய்த்துறை, புள்ளியியல் துறை ஆகியவற்றின் மூலம் 14 வட்டாரங்களிலும் பாதிக்கப்பட்ட உளுந்துப் பயிா்கள் குறித்து விரிவான கணக்கெடுப்பு நடத்தி உரிய நிவாரணம் வழங்க வேண்டும். வம்பன் ரகத்தை தவிா்த்து ஆடுதுறை ஆராய்ச்சி மையம், கோவை வேளாண் ஆராய்ச்சி மையம் மூலம் வெளியிடப்பட்ட புதிய உளுந்து ரகங்களை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என்றாா். பாதிக்கப்பட்ட விவசாயிகள், தங்களது நோய் தாக்கிய பயிா்களுடன் திருச்சி ஆட்சியரகத்துக்கு வந்து திங்கள்கிழமை புகாா் தெரிவித்தனா்.
இதுதொடா்பாக, வேளாண்மைத்துறையினா் கூறுகையில், விவசாயிகள் அளித்த புகாா் மனு தொடா்பாக மணிகண்டம், அந்தநல்லூா் வட்டாரங்களில் வேளாண்மை அலுவலா்கள் ஆய்வு செய்து வருகின்றனா். நோய் பாதிப்பு தொடா்பாக ஆட்சியரின் உத்தரவுப்படி அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.