சுதேசி பொருள்களைப் பயன்படுத்த மாணவர்களுக்கு ஊக்கம்- பிரதமர் மோடி வலியுறுத்தல்
மணிப்பூரில் அமைதி திரும்புகிறதா? மத்திய அரசுடன் புதிய ஒப்பந்தம்!
மணிப்பூரில் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக தொடரும் வன்முறையில் முடிவு எட்டப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
செப்டம்பர் மாதம் இரண்டாவது வாரத்தில் மணிப்பூருக்கு பிரதமர் மோடி செல்ல வாய்ப்புகள் உள்ளதாகக் கூறப்படும் நிலையில், அங்கு அமைதியைக் கொண்டு வருவதற்கான ஒப்பந்தம், தில்லியில் இன்று கையெழுத்தாகியுள்ளது.
தில்லியில் இன்று மத்திய அரசுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், குக்கி - ஜோ குழுவினர் ஒரு புதிய ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளனர்.
ஒப்பந்தத்தில், முக்கியமானதாக தேசிய நெடுஞ்சாலை - 2ஐ மீண்டும் திறப்பது குறித்து குறிப்பிட்டுள்ளது. இதன் மூலம், பயணிகள் மற்றும் அத்தியாவசிய பொருள்களின் இயக்கத்துக்கு பெருந்துணையாக இருக்கும். இந்தப் பாதையில் (தேசிய நெடுஞ்சாலையில்) அமைதியை உறுதிப்படுத்த பாதுகாப்புப் படைகளுடன் இணைந்து பணியாற்றுவதாக குக்கி - ஜோ அமைப்பு உறுதியளித்துள்ளது.
மேலும், மோதல் ஏற்படக்கூடிய இடங்களிலிருந்து தங்களின் 7 முகாம்களை இடமாற்றம் செய்வதாக குக்கி தேசிய அமைப்பு மற்றும் ஐக்கிய மக்கள் முன்னணியினர் உறுதியளித்துள்ளனர். தொடர்ந்து, முகாம்களின் எண்ணிக்கையைக் குறைக்கவும், ஆயுதங்களை சிஆர்பிஎஃபிடம் ஒப்படைக்கவுள்ளனர்.
இந்த ஒப்பந்தத்தில் சில மறுபரிசீலனை செய்யப்பட்ட அடிப்படை விதிகளும் அடங்கும். இருப்பினும், அவை அடுத்தாண்டு முதலே நடைமுறைக்கு வரும்.
மணிப்பூர் மாநிலத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு மே மாதத்தில் இருந்து இரண்டு சமூகத்தினரிடையே மோதல் நீடித்து வருகிறது.
இந்த மோதலில், இதுவரை 250-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்; 60,000-க்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து, மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சியும் அமல்படுத்தப்பட்டது.
இதனிடையே, மணிப்பூரில் வன்முறை வெடித்ததில் இருந்து, ஒருமுறைகூட பிரதமர் மோடி அங்கு செல்லவில்லை என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வந்த நிலையில்தான், இந்த மாதம் இரண்டாம் வாரத்தில் பிரதமர் மோடி செல்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.