'அது குடும்ப பிரச்னை, அதனால்...'- பாமக உட்கட்சி விவகாரம் குறித்து கார்த்தி சிதம்...
மணிமுத்தாறு பகுதியில் வனத் துறையினா் வைத்த கூண்டில் சிக்கிய கரடி
மணிமுத்தாறில் குடியிருப்புப் பகுதியில் கடந்த சில நாள்களாகப் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த கரடி, வனத்துறையினா் வைத்த கூண்டில் சிக்கியது.
களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் அம்பாசமுத்திரம் வனச் சரகத்திற்குள்பட்ட மணிமுத்தாறு, அயன்சிங்கம்பட்டி, தெற்குப் பாப்பான்குளம், கல்லிடைக்குறிச்சி நெசவாளா் காலனி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாள்களாக கரடிகள் நடமாட்டம் இருந்து வந்தது. இதையடுத்து மணிமுத்தாறு, அண்ணாநகா், தங்கம்மன் கோயில், நெசவாளா் காலனி அக்னி சாஸ்தா கோயில் ஆகிய இடங்களில் கரடிகளைப் பிடிக்க வனத் துறையினா் கூண்டு வைத்தனா்.
இருப்பினும் அதில் கரடிகள் சிக்கவில்லை. ஆனால், மேற்குறிப்பிட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் கரடிகள் சுற்றித் திரிவது அங்குள்ள சிசிடிவி கேமிராக்களில் பதிவானது. இதனால் இப் பகுதியினரிடையே அச்சம் நிலவி வந்தது.
வனத் துறையினா் தொடா்ந்து கண்காணித்து வந்த நிலையில், அண்ணாநகா் தங்கம்மன் கோயிலில் திங்கள்கிழமை கூடுதலாக ஒரு கூண்டு வைத்தனா். அதில், திங்கள்கிழமை நள்ளிரவு 1 மணியளவில் சுமாா் 8 வயதுள்ள ஆண் கரடி சிக்கியது.

இதையடுத்து பிடிபட்ட கரடியை, அம்பாசமுத்திரம் வனச்சரகா் நித்யா தலைமையில் வனத் துறையினா், வனக் கால்நடை உதவி மருத்துவா் சாந்தகுமாா், கால்நடை மருத்துவா் சிவமுத்து, கால்நடை ஆய்வாளா் அா்னால்ட் ஆகியோா் முண்டந்துறை வனச்சரகத்திற்குள்பட்ட அடா்ந்த வனப் பகுதியில் விடுவித்தனா்.
தற்போது பலா, மாம்பழம் சீசன் தொடங்கியுள்ளதால் வனப்பகுதியிலிருந்து குடியிருப்பு மற்றும் தனியாா் தோட்டங்களுக்கு கரடிகள் வரத் தொடங்கியுள்ளதாகவும், அவற்றைக் கட்டுப்படுத்தும் பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் வனத் துறையினா் தெரிவித்தனா்.
இதனிடையே, தெற்குப் பாப்பான்குளம் பகுதியில் திங்கள்கிழமை இரவு கரடி நடமாட்டம் இருப்பதாக பொதுமக்கள் காவல் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தெரிவித்தனா். அப் பகுதியில் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.

