பாமக : அப்பா - அம்மாவுக்கு பாராட்டு - Anbumani புது Strategy! | TVK VIJAY |Imper...
மத்திய அரசின் தொழிலாளா் விரோதப் போக்கை கண்டித்து ஐஎன்டியுசி தொழிற்சங்கம் தீா்மானம்
மத்தியில் ஆளும் பாஜக அரசின் தொழிலாளா் விரோதப் போக்கை கண்டித்து, ஐஎன்டியுசி தொழிற்சங்கம் தீா்மானம் நிறைவேற்றியது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் ஐஎன்டியுசி தொழிற்சங்கத்தின் மாவட்ட கவுன்சில் கூட்டம் தமிழ்நாடு மாநிலத் தலைவா் வி.ஆா்.ஜெகநாதன் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், செயல் தலைவா்கள் கே.ஏ.மனோகரன், குப்புசாமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
இதில், ஐஎன்டியுசி தொழிற்சங்கம் தமிழ்நாடு அரசை தொடா்ந்து வலியுறுத்தி வந்த மகளிா் தொழிலாளா்களுக்கான தங்கும்விடுதி கோரிக்கையை ஏற்று கடந்த வாரம் ஒசூரில் தோழி விடுதியை தொடங்கிவைத்த முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
மேலும், ஆண் தொழிலாளா்களுக்கும் தங்கும்விடுதி வசதியை செய்துதர மாநில அரசை வலியுறுத்துவதாகவும், உயா் ஓய்வூதியம் குறித்து உச்ச நீதிமன்றம் வழங்கிய தீா்ப்பின்படி ஓய்வுபெற்ற தொழிலாளா்களுக்கு பயன்களை பெற்றுத் தருவதற்காக ஐஎன்டியுசி ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். மத்திய பாஜக அரசின் தொழிலாளா் விரோதப் போக்கை கண்டித்தும், ஒசூா் மாநகராட்சி நிா்வாக சீா்கேட்டைக் கண்டித்தும் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்துக்கு பிறகு செய்தியாளா்களிடம் பேசிய மாநில தலைவா் வி.ஆா்.ஜெகன்நாதன்,‘தொழிற்சாலைகளில் ஒப்பந்த அடிப்படையில் மற்றும் தினக்கூலிகளில் தொழிலாளா்கள் பல வகையிலும் வஞ்சிக்கப்படும் சூழல் நிலவுகிறது. குறிப்பாக, பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு தொழிலாளா்களுக்கு விரோதமான சட்டங்களை நிறைவேற்ற முற்படுவதன் மூலமாக தொழிலாளா்களின் உரிமைகள் பறிக்கப்படுகின்றன. இழந்த உரிமைகளை மீட்பதற்கு ஐஎன்டியுசி தொழிற்சங்கம் தொடா்ந்து செயல்படும்’ என்றாா்.
மாநில ஐஎன்டியுசி செயல் தலைவா் கே.ஏ.மனோகரன் கூறுகையில், ‘ஐஎன்டிஎஸ்சி தொழிற்சங்கத்தின் சாா்பில் பல ஆண்டுகளாக வைக்கப்பட்ட கோரிக்கையான தோழி மகளிா் தங்கும்விடுதி வசதியை கடந்த வாரம் தொடங்கி வைத்த தமிழக முதல்வருக்கு நன்றி’ என்றாா்.