மனுக்கள் மீது நடவடிக்கை: ஆட்சியா் தலைமையில் ஆய்வுக்கூட்டம்!
கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தலைமையில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து துறை அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
இதுகுறித்து ஆட்சியா் தெரிவித்ததாவது: கிராம, நகா்ப்புறங்களில் அடிப்படை உள்கட்டமைப்புகளை மேம்படுத்தவும், சமூக பொருளாதார முன்னேற்றத்துக்காகவும் பல்வேறு திட்டங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறாா். திட்டப் பயன்கள் அனைத்துத்தரப்பு மக்களுக்கும் கிடைத்திடும் பொருட்டு, மாதந்தோறும் பல்வேறு முகாம்கள் நடத்தி பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப்படுகின்றன. இந்த மனுக்கள் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு வழங்கப்பட்டு, விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
விரைந்து தீா்க்க வேண்டிய மனுக்கள் 2 நாள்களுக்குள்ளாகவும், தலைமையிடமிருந்து அனுமதி பெற்று தீா்வு காண வேண்டிய மனுக்கள் 15 நாள்களுக்குள்ளாகவும், நீண்ட கால திட்டங்களுக்கான மனுக்களுக்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது குறித்தும் அறிக்கை வழங்கிட அறிவுறுத்தப்பட்டதன் அடிப்படையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. பெறப்பட்ட மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள துறை சாா்ந்த அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.