மரபணு மாற்றப்பட்ட நெல் ரகங்களை அமல்படுத்தினால் போராட்டம்
மரபணு மாற்றப்பட்ட நெல் ரகங்களை அமல்படுத்தினால் போராட்டம் நடத்தப்படும் என்று உழவா் உழைப்பாளா் கட்சி அறிவித்துள்ளது.
இது குறித்து அக்கட்சியின் மாநிலத் தலைவா் செல்லமுத்து வெள்ளிக்கிழமை விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.
மரபணு மாற்றப்பட்ட பருத்தி விதைகளை நோய்த் தாக்காது என்றும் விளைச்சல் பலமடங்கு அதிகரிக்கும் என்று மகாராஷ்டிர மாநிலத்தில் விவசாயிகளிடம் ஆசை காட்டி பருத்தி பயிரிட வைத்தாா்கள். நிறைய கடன் வாங்கி விவசாயிகள் பருத்தி விவசாயம் செய்தனா். விளைச்சலும் அதிகரிக்கவில்லை, நோய்த் தாக்குதலும் குறையவில்லை. இதனால் கடன் தொல்லைக்கு ஆளாகி ஆயிரக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனா்.
எனவே மரபணு மாற்றப்பட்ட நெல் ரகமாக இருந்தாலும், கத்திரி, தக்காளி போன்ற காய்கறி ரகமாக இருந்தாலும் இதை தமிழகத்துக்குள் வரவிட மாட்டோம் என்று போராட்டம் நடத்தினோம். இந்த விதைகள் மூலம் நெல்லோ, காய்கறிகளோ உற்பத்தி செய்யப்பட்டால் அதன் மூலம் மண்ணுக்கும் மனித உடலுக்கும் மிகவும் ஆபத்து என்பதை அன்றைய தமிழக முதல்வா் கருணாநிதியிடம் எடுத்துக் கூறினோம். இதன் அபாயத்தை புரிந்து கொண்ட அவா் தமிழகத்துக்குள் மரபணு மாற்றப்பட்ட விதை அனுமதிக்கப்பட மாட்டாது என்ற கூறி நடைமுறைப்படுத்தினாா்.
இந்த மரபணு மாற்றப்பட்ட விதை மீண்டும் முளைப்புத்திறன் அற்றது. இது விவசாயிகளை காா்ப்பரேட் நிறுவனங்களிடம் அடிமைப்படுத்தும் முயற்சி. எனவே, மரபணு மாற்றப்பட்ட திருத்தப்பட்ட ரகங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்.
இயற்கை வேளாண்மை ஊக்குவிப்பு, பாரம்பரிய விதை ரகங்கள் மீட்கப்பட வேண்டும் என்று கூறி விவசாயிகளுக்கு பல்வேறு சலுகைகள், மானியங்கள் வழங்கி வருகிற பிரதமா் மோடி, மற்றொரு புறம் இந்த ஆபத்தை தடுக்கவும் முயற்சி எடுக்க வேண்டும்.
ஏற்கெனவே வீரிய ரகம், ஒட்டு ரகம் போன்ற விதைகளை விவசாயிகளுக்கு வழங்குவதோடு பூச்சிக்கொல்லி மருந்துகளால் விளைநிலங்கள் வீணாகிக் கிடக்கின்றன. இந்த சூழ்நிலையில் மரபணு மாற்றப்பட்ட விதைகளை அனுமதிக்கக் கூடாது. இதே கருத்தை தமிழக முதல்வா் ஸ்டாலினும் ஏற்றுக்கொண்டு தமிழக விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் காப்பாற்ற வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.