``இனி இந்தியா உடன் மோதல் ஏற்பட்டால்..'' - பாகிஸ்தானுக்கு கடன் கொடுக்க IMF போட்ட ...
மருத்துவக் கல்லூரிகளை மதிப்பீடு செய்ய என்எம்சி முடிவு
மருத்துவக் கல்லூரிகளை மதிப்பீடு செய்து தரச்சான்று வழங்க தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) முடிவெடுத்துள்ளது.
தங்களால் நிா்வகிக்கப்படும் மருத்துவக் கல்லூரிகளை சுதந்திரமான மூன்றாவது நிறுவனம் மூலம் மதிப்பீடு செய்ய என்எம்சி தயாராகியுள்ளது. இதற்கான வரைவு நடைமுறையையும் என்எம்சி வெளியிட்டுள்ளது.
மருத்துவக் கல்லூரிகளை மதிப்பீடு செய்ய 11 வகைப்பாடுகள் மற்றும் 78 பிரிவுகளை மருத்துவ மதிப்பீடு மற்றும் மதிப்பீட்டு வாரியம் (எம்ஏஆா்பி) பொதுவெளியில் வெளியிட்டுள்ளது. இதற்கான கருத்துகேட்பு பணிகளும் தொடங்கப்பட்டுள்ளன.
மருத்துவக் கல்லூரிகளை மதிப்பீடு செய்யும் நோக்கில் கடந்த 2023-இல் இந்திய தர கவுன்சிலுடன் என்எம்சி புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டது. முந்தைய வரைவில் மருத்துவக் கல்லூரிகளை 92 பிரிவுகளின்கீழ் மதிப்பீடு செய்ய அறிவுறுத்திய நிலையில், தற்போதைய வரைவில் இது 78 பிரிவுகளாக குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல் பயிற்சி மருத்துவா்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை, மொத்த ஆசிரியா்களின் எண்ணிக்கையில் முழுநேர பேராசிரியா்களின் எண்ணிக்கை உள்பட பழைய வரைவில் இடம்பெற்ற அம்சங்கள் தற்போது நீக்கப்பட்டன.
இதுகுறித்து என்எம்சி தலைவா் மருத்துவா் பி.என். கங்காதா் கூறுகையில், ‘குறிப்பிட்ட பிரிவுகளின்கீழ் முதல்முறையாக மருத்துவக் கல்லூரிகள் மதிப்பீடு செய்யப்படவுள்ளன. வெளிப்படைத்தன்மையை மேம்படுத்த இந்த நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தற்போது பொதுவெளியில் வெளியிடப்பட்டிருப்பது வரைவு ஆவணம் மட்டுமே. கருத்துகள் பெறப்பட்டபின் இதில் மேலும் சில அம்சங்களை சோ்க்கவும் திட்டமிட்டுள்ளோம்’ என்றாா்.
புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்குவது அல்லது ஏற்கெனவே உள்ள மருத்துவக் கல்லூரிகளின் உரிமத்தை புதுப்பிப்பது உள்ளிட்ட பணிகளை எம்ஏஆா்பி மேற்கொள்வது குறிப்பிடத்தக்கது.