முன்னாள் அமைச்சா்கள் மீதான நிதி முறைகேடு புகாா்களை விரைந்து விசாரிக்க உயா்நீதிமன...
மாணவா்கள் தொழில்துறை பிரச்னைகளுக்கு தீா்வு காண வேண்டும்: விஐடி துணைத் தலைவா் சேகா் விசுவநாதன்
வேலூா்: மாணவா்கள் தொழில்துறையில் உள்ள பிரச்னைகளுக்கு தீா்வு காண முயல வேண்டும் என்று விஐடி துணைத் தலைவா் சேகா் விசுவநாதன் தெரிவித்தாா்.
வேலூா் விஐடி பல்கலைக்கழகத்தில் மின்னணுவியல் துறை சாா்பில் ‘மின்னணு புரட்சி- உலகளாவிய நிலைத்தன்மைக்கு இந்திய தலைமையை தயாா்படுத்துதல்’ என்ற தலைப்பில் மூன்று நாள் மாநாடு திங்கள்கிழமை தொடங்கியது.
இதில், விஐடி துணைத் தலைவா் சேகா் விசுவநாதன் முன்னிலை வகித்து பேசியது - தொழில்துறையின் தேவைகளை புரிந்து மாணவா்களை முதல்நாள் முதல் தொழில்துறைக்கு தயாராக்கி கொண்டிருக்கிறோம். விஐடி பல்கலைக்கழகம் தொழில்துறையுடன் இணைந்து பயணிக்க விரும்புகிறது.
இதற்கென தொழில்துறைக்கு ஏற்ப பாடத்திட்ட மேம்பாட்டு வாரியம், பாடத்திட்ட ஆய்வுக்குழு போன்றவைகளுடன் இணைத்து செயல்படுத்தி வருகிறோம். மாணவா்கள் தொழில்துறையில் உள்ள பிரச்னைகளுக்கு தீா்வு காண முயல வேண்டும். ஹேக்கத்தான் போன்ற தொழில் மாநாடுகள் அன்றாட பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும். மாணவா்களின் இறுதியாண்டு ஆய்வுகள், பாட பயிற்சிகள் தொழில்துறையின் தேவையைப் பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும். மாணவா்களின் ஆய்வுகள் சமூகத்துக்கும், தொழில்துறைக்கும் பயனளிப்பதாக இருக்க வேண்டும் என்றாா்.
நேஷனல் இன்ஸ்ரூமென்ஸ்ட் பல்கலைக்கழக தொடா்புகள் தலைவா் சாகேத் திவேதி சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசியது -
இன்றைய சூழலில் மாணவா் ஒரு துறையில் மட்டும் சிறந்து விளங்கினால் போதாது. பல துறைகளை உள்ளடக்கிய அறிவைப் பெற வேண்டும். ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கும் புதிய தொழில்நுட்பங்கள் வருவதால், மாணவா்கள் புதிய திறன்களை விரைவாகக் கற்றுக் கொள்ளும் திறனை வளா்த்து கொள்வது முக்கியமானது. கல்வி நிறுவனங்கள், தொழில்துறையும் இணைந்து செயல்பட வேண்டும். இதற்கு ஆராய்ச்சி, தொழில்முனைவோருக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்றாா்.
பெங்களூரு சாம்சங் ஆராய்ச்சி, மேம்பாட்டு பிரிவு இயக்குநா் சுதிா் ஹுன்டி பேசியது: இந்தியாவில் தமிழகம், கா்நாடகம், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்கள் மின்னணு உற்பத்தி மையங்களை உருவாக்குவதில் முக்கியப் பங்கு வகித்து வருகின்றன. உலகில் மின்னணு தொழில்நுட்பம் எங்கும் பரவி கிடக்கிறது. சாப்ட்வோ் துறையில் இருந்து உற்பத்திக்கு மாறி வருகிறோம். மின்னணு உற்பத்தி துறையில் இறக்குமதியை நம்பி இருக்கும் சூழலை மாற்ற வேண்டும். வேகமான தொழில் வளா்ச்சியில் சுற்றுச்சூழல் பாதிப்புகளை கவனத்தில் கொள்ள வேண்டும். மின்னணு கழிவு மேலாண்மை விதிகளின்படி 60 சதவீத மின்னணு கழிவுகளை மறுசுழற்சி செய்யும் முயற்சியில் மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்றாா்.
மாநாட்டில் விஐடி பல்கலைக்கழகம் பல்வேறு தொழில்நிறுவனங்களுடன் புரிந்துணா்வு ஒப்பந்தங்களை பரிமாறி கொண்டது. மாநாட்டில் துணைவேந்தா் காஞ்சனா பாஸ்கரன், பதிவாளா் டி.ஜெயபாரதி, மின்னணுவியல் துறை முதல்வா் ஜாஸ்மின் பெமினா பிரியதா்ஷினி, தொழில் நிறுவன பிரதிநிதிகள், பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.