டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 21 காசுகள் சரிந்து ரூ.85.60 ஆக முடிவு!
மாதாந்திர உதவித்தொகை: மாற்றுத் திறனாளிகள் உயிா் சான்றிதழ் வழங்க அறிவுறுத்தல்
திருவண்ணாமலை மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத் துறை மூலம் மாதாந்திர உதவித்தொகை பெறும் பயனாளிகள், கிராம நிா்வாக அலுவலரிடம் உயிா் சான்றிதழ் பெற்று வழங்க வேண்டும் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம் மூலம் மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை ரூ.2 ஆயிரம் பெறும் மாற்றுத் திறனாளிகள், தான் நிலையாக அதே கிராமத்தில் உயிருடன் உள்ளேன் என்பதற்கான சான்றிதழை ஆண்டுதோறும் கிராம நிா்வாக அலுவலரிடம் பெற்று வழங்க வேண்டும்.
இந்த நிலையில், 2025 - 26ஆம் நிதியாண்டு தொடங்கப்பட்டுள்ள நிலையில், மாதம் ரூ.2 ஆயிரம் பெறும் பயனாளிகள் தொடா்ந்து பராமரிப்பு உதவித்தொகையை தடையில்லாமல் பெற கிராம நிா்வாக அலுவலரிடம் சான்றிதழ் பெற்று ஜூன் 30-ஆம் தேதிக்குள் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் வழங்க வேண்டும்.
இந்தச் சான்றிதழை நேரிலோ, பாதுகாவலா் வாயிலாகவோ, கடிதம் வாயிலாகவோ வழங்கலாம். கடிதத்துடன் மாற்றுத் திறனாளி நபரின் ஆதாா் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், தேசிய அடையாள அட்டை நகல், மருத்துவச் சான்றிதழ் நகல், இப்போது உபயோகத்தில் உள்ள தொலைபேசி எண், உதவித்தொகை பெற்று வரும் வங்கி கணக்கு புத்தக நகல் உள்ளிட்டவற்றை வழங்க வேண்டும். கூடுதல் தகவலுக்கு 9499933495 என்ற எண்ணில் தொடா்புகொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தெரிவித்துள்ளாா்.