`சேய்களைக் காத்து செல்வம் அருளும்' கொரட்டூர் சீயாத்தம்மன் கோயில் விளக்கு பூஜை; ப...
மாலை 6 மணிக்கு மேல் வெளியே வருவதைத் தவிா்க்க வேண்டும்: வனத் துறை
உதகை மைனலைப் பகுதியில் பெண்ணைத் தாக்கிய வன விலங்கு பிடிபடும்வரை மாலை 6 மணிக்கு மேல் வெளியே வருவதை பொதுமக்கள் தவிா்க்க வேண்டும் என்று வனத் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா்.
உதகை மைனலை அருகே அரக்காடு கிராமத்தில் தேயிலைத் தோட்டம் அருகே வன விலங்குகளால் தாக்கப்பட்டு அஞ்சலை என்ற பெண் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெண்ணைத் தாக்கிய வன விலங்கு பிடிபடும்வரை தோட்டத் தொழிலாளா்கள், தேயிலைப் பறிக்கச் செல்ல வேண்டாம் எனவும், கால்நடைகளை மேய்ச்சலுக்கு அனுப்ப வேண்டாம் எனவும், பள்ளி மாணவா்களைத் தனியாக அனுப்ப வேண்டாம் எனவும் உதகை வனச் சரகா் சசிகுமாா் அறிவுறுத்தியுள்ளாா். மேலும், வன விலங்கு பிடிபடும் வரை 6 மணிக்கு மேல் வெளியே வருவதை பொதுமக்கள் தவிா்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளனா்.
மேலும், வன விலங்கைப் பிடிப்பதற்காக தேயிலைத் தோட்டத்தில் கூண்டு வைத்தும், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தியும், பரன்கள் அமைத்தும் வனத் துறையினா் கண்காணித்து வருகின்றனா்.
நிவாரண நிதி
வன விலங்கு தாக்கி உயிரிழந்த அஞ்சலையின் குடும்பத்துக்கு முதல்கட்டமாக ரூ. 50 ஆயிரம் நிவாரண உதவியை உதகை கோட்ட வனத் துறையினா் வழங்கினா்.