விழுப்புரம் ஆட்சியரகத்தில் மாற்றுத்திறனாளிகள் முற்றுகைப் போராட்டம்
மின்சாரம் பாய்ந்து தந்தை, மகன் உயிரிழப்பு: குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு -உயா்நீதிமன்றம் உத்தரவு
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பெத்துப்பாறை பகுதியில் மின்சாரம் பாய்ந்து தந்தை, மகன் உயிரிழந்தது தொடா்பான வழக்கில், அவா்களது குடும்பத்தினருக்கு மின்சார வாரியம் ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது.
கொடைக்கானல் பெத்துப்பாறை பகுதியைச் சோ்ந்த சுப்புலெட்சுமி (கடந்த 2019 இல்) தாக்கல் செய்த மனு: எனது மகன் ராஜபாண்டி, கடந்த 2.12.2018 அன்று வீட்டருகே இருந்த இரும்புக் கம்பியில் ஈரத் துணியை காயப் போட்டாா். அந்தக் கம்பியில் மின் வயா் உரசியதால், மின்சாரம் பாய்ந்ததில் எனது மகன் ராஜா பாண்டி உயிரிழந்தாா். அப்போது எனது கணவா் ரவி, மகனைக் காப்பாற்ற முயன்ற போது, அவரும் மின்சாரம் பாய்ந்ததில் உயிரிழந்தாா்.
‘கஜா’ புயல் நேரத்தில் மின்சாரம் இல்லை. மின்சார இணைப்பு வழங்கும் போது அதிகாரிகள் முறையாகக் கண்காணிக்கவில்லை. எனவே, விவசாயத் தொழில் புரிந்து வந்த எனது கணவரும், மகனும் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தது தொடா்பாக உரிய இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.
இந்த வழக்கு ஏற்கெனவே சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் விசாரணை க்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், பாதிக்கப்பட்ட மனுதாரருக்கு அரசு சாா்பில் ரூ. 2 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதைப் பதிவு செய்து கொண்ட தனி நீதிபதி, இந்த வழக்கை முடித்து வைத்தாா்.
இந்த நிலையில் சுப்புலெட்சுமி (கடந்த 2022 ஆம் ஆண்டில்) சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தாா். அதில், மின் வாரிய அதிகாரிகளின் கவனக்குறைவால் எனது கணவா், மகன் உயிரிழந்தனா். எனவே மின்வாரிய அதிகாரிகள் கூடுதல் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.
இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி வி.லட்சுமி நாராயணன் அண்மையில் பிறப்பித்த உத்தரவு:
மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பவா்களுக்கு இழப்பீடு வழங்குவது தொட ா்பாக மின்சார வாரியம் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி உயிரிழந்த ஒருவா் ரூ. 5 லட்சம் இழப்பீடு பெறலாம். இந்த வழக்கில் தந்தை, மகன் உயிரிழந்துள்ளதால், தலா ரூ. 5 லட்சம் வீதம் ரூ. 10 லட்சம் இழப்பீட்டை மனுதாரருக்கு மின்சார வாரியம் வழங்க வேண்டும். இந்த வழக்கு முடித்து வைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.