பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் 24 மணிநேரத்திற்குள் வெளியேற உத்தரவு!
மீண்டும் ஆஸ்திரேலியாவின் பிரதமரானார் அந்தோனி அல்பனீசி!
ஆஸ்திரேலியாவில் நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் பெருவாரியாக வெற்றியடைந்த அந்தோனி அல்பனீசி 2வது முறையாகப் பிரதமாராகப் பதவியேற்றார்.
ஆஸ்திரேலியா நாட்டில் நடைபெற்ற தேர்தலில் முடிவுகள் கடந்த மே 3 ஆம் தேதியன்று வெளியானது. இதில், அந்நாட்டின் பிரதமராகப் பதவி வகித்த அந்தோனி அல்பனீசி-ன் மத்திய இடது சாரி தொழிலாளர் கட்சி பெருவாரியான வெற்றியைப் பெற்றது.
இந்தத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கைப் பணிகளை ஆஸ்திரேலிய தேர்தல் ஆணையம் இன்னும் மேற்கொண்டு வரும் நிலையில், 150 பிரதிநிதிகள் இடம்பெறும் ஹவுஸ் ஆஃப் ரெப்ரெசெண்டேடிவ்ஸ் எனப்படும் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தொழிலாளர் கட்சி சுமார் 92 முதல் 95 இடங்களைப் பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும், தொழிலாளர் கட்சியின் வெற்றி உறுதி செய்யப்பட்ட நிலையில் அந்தோனி அல்பனீசி இன்று (மே 13) இரண்டாவது முறையாக ஆஸ்திரேலியாவின் பிரதமராகப் பதவியேற்றுக்கொண்டார். அவருடன், அவரது அரசில் இடம்பெறும் அமைச்சர்களும் பதவியேற்றுக்கொண்டதாகக் கூறப்படுகிறது.
முன்னதாக, அந்நாட்டின் பிரதான எதிர்க்கட்சிகள் வெறும் 41 இடங்களை மட்டுமே வென்று இம்முறை கடுமையான தோல்வியைச் சந்தித்துள்ளது.
மேலும், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரான பீட்டர் டட்டனின் தோலிவியைத் தொடர்ந்து பிரதான எதிர்க்கட்சியான லிபரல் பார்டியின் தலைவராக சூசன் லே என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கடந்த 1944-ம் ஆண்டு துவங்கப்பட்ட அந்தக் கட்சியின் முதல் பெண் தலைவர் இவர் எனக் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், தற்போது 2வது முறையாக பதவியேற்றுள்ள அந்தோனி அல்பனீசி நாளை (மே 14) அரசு முறைப் பயணமாக இந்தோனேஷியா செல்கிறார். அங்கு அந்நாட்டு அதிபர் பிரபாவோ சுபியாந்தோவைச் சந்திக்கவுள்ளார்.
பின்னர், அங்கிருந்து ரோம் நகருக்குச் செல்லும் பிரதமர் அல்பனீசி, புதிய போப் பதினான்காம் லியோவின் பதவியேற்பு விழாவில் கலந்துக்கொள்வார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: மியான்மர் நிலநடுக்கம்: இடிந்த தாய்லாந்து கட்டடத்தில் தேடுதல் பணிகள் நிறுத்தம்!