ThugLife: கமல், சிம்பு, த்ரிஷா, அசோக் செல்வன்; 'தக் லைஃப்' ட்ரெய்லர் வெளியீட்டு ...
மீனாட்சி சுந்தரேசுவரா் எழுந்தருளல்: மதுரையில் இன்று போக்குவரத்து மாற்றம்
சித்திரைத் திருவிழாவையொட்டி, மீனாட்சி சுந்தரேசுவரா் வில்லாபுரம் பாவக்காய் மண்டகப்படியில் எழுந்தருளுவதையொட்டி, மதுரை நகரில் வெள்ளிக்கிழமை (மே 2) போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக மதுரை மாநகரப் போக்குவரத்து காவல்துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் சித்திரைத் திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவின் நான்காம் நாளான வெள்ளிக்கிழமை சுவாமியும், அம்மனும் வில்லாபுரம் பாவக்காய் மண்டபத்தில் எழுந்தருளும் நிகழ்வு நடைபெறுகிறது. இதனால், நகா், சுற்றுப்புற பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலிலிருந்து சுவாமி, அம்மன் புறப்பட்டு மீனாட்சி தெரு, ஜடாமுனி கோவில் சந்திப்பு, தெற்கு ஆவணி மூல வீதி, தொட்டியன் கிணற்றுச் சந்து, மறவா் சாவடி, சின்னக்கடை இரண்டாவது தெரு, தெற்கு மாரட் வடமலையான் சந்திப்பு, தெற்குவாசல் சந்திப்பு வழியாக வில்லாபுரம் ஜெயவிலாஸ் சந்திப்பு அருகில் உள்ள பாவக்காய் மண்டபம் சென்று அன்று பிற்பகல் 3 மணியளவில் மீண்டும் அதே வழியாக தொட்டியன் கிணற்றுச் சந்து, தெற்கு ஆவணி மூல வீதி சந்திப்பு வரை வந்து சொக்கப்ப நாயக்கா் தெரு, தெற்கு, மேற்கு, வடக்கு சித்திரை வீதிகள் வழியாக கிழக்கு சித்திரை வீதி வழியாக கோயிலை வந்தடையும்.
சுவாமியும், அம்மனும் கோயிலிலிருந்து வெளியேறி, பாவக்காய் மண்டபம் சென்று மீண்டும் கோயிலுக்குத் திரும்பும் வரை தெற்கு ஆவணி மூல வீதி- தொட்டியன் கிணற்றுச் சந்து சந்திப்பு முதல் ஜடாமுனி கோவில் சந்திப்பு வரை சொக்கப்ப நாயக்கா் தெரு, சின்னக் கடை வீதி ஆகிய இடங்களில் எந்த வாகனங்களும் நிறுத்த தடை விதிக்கப்படுகிறது.
சுவாமி பாவக்காய் மண்டபத்தில் எழுந்தருளும் போது அவனியாபுரத்திலிருந்து நகா் நோக்கி வரும் வாகனங்கள் ஜெயவிலாஸ் சந்திப்பை நோக்கிச் செல்ல அனுமதி கிடையாது. இந்த வாகனங்கள் லிட்டில் டைமண்ட் பள்ளி வழியாக ஜெய்ஹிந்துபுரம் சாலை சென்று ஜீவாநகா் சந்திப்பு வழியாக நகருக்குள் செல்ல வேண்டும். சுவாமி தெற்குவாசல் சந்திப்பைக் கடந்து பாவக்காய் மண்டபத்தில் எழுந்தருளும் வரை ஜெய்ஹிந்துபுரம் சாலை வழியாக ஜெயவிலாஸ் சந்திப்பை நோக்கி வரும் வாகனங்களுக்கு அனுமதி கிடையாது. இந்த வாகனங்கள் அடுக்குமாடி குடியிருப்பு காலனி வழியாக திரும்பி வில்லாபுரம் நோக்கியும் ஜீவாநகா் சந்திப்பு வழியாக நகருக்கு உள்ளேயும் செல்ல வேண்டும.
சிந்தாமணி சாலை, கீரைத்துறை வழியாக என்எம்ஆா் பாலம் பக்கவாட்டுச் சாலையில் ஜெயவிலாஸ் சந்திப்பை நோக்கி வரக்கூடிய வாகனங்களுக்கு அனுமதி கிடையாது. இந்த வாகனங்கள் கீரைத்துறை சந்திப்பில் திரும்பி பழைய குயவா்பாளையம் வழியாகச் செல்ல வேண்டும். சுவாமி தெற்குவாசல் சந்திப்பைக் கடந்து பாவக்காய் மண்டபத்தில் எழுந்தருளும் வரை தெற்குவாசல் சந்திப்பிலிருந்து என்எம்ஆா் பாலம் வழியாக ஜெயவிலாஸ் சந்திப்பை நோக்கி வரும் வாகனங்களுக்கு அனுமதி கிடையாது. இரு சக்கர வாகனங்கள், இலகுரக வாகனங்கள் மட்டும் மீனாட்சி திரையரங்கு பள்ளம் வழியாக ஜெய்ஹிந்துபுரம், அடுக்குமாடி குடியிருப்பு காலனி வழியாக வில்லாபுரத்துக்குச் செல்ல வேண்டும். கனரக வாகனங்கள் அழகப்பன்நகா் ரயில்வே கடவுப்பாதை, முத்துப்பட்டி சாலை, அவனியாபுரம் வழியாக அருப்புக்கோட்டை சாலைக்குச் செல்லலாம்.
வாகனங்கள் நிறுத்துமிடங்கள்: அவனியாபுரம் சாலையிலிருந்து சுவாமி தரிசனம் செய்ய வரக்கூடிய பொதுமக்களின் வாகனங்கள் லிட்டில் டைமண்ட் பள்ளி சந்திப்பு முதல் வில்லாபுரம் சாலையோரமாக நிறுத்திக் கொள்ளலாம். தெற்கு வெளி வீதி வழியாக சுவாமி தரிசனம் செய்ய வரக்கூடிய பொதுமக்களின் வாகனங்கள் ஜெய்ஹிந்துபுரம் சாலையோரமாக நிறுத்திக் கொள்ளலாம். ஜெய்ஹிந்துபுரம் சாலையிலிருந்து சுவாமி தரிசனம் செய்ய வரக்கூடிய பொதுமக்களின் வாகனங்கள் ஜெய்ஹிந்துபுரம் சாலையோரமாக நிறுத்திக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.