மீன்கள் அதிகம் கிடைக்காததால் மீனவா்கள் ஏமாற்றம்
நாகையில் மீன்பிடி தடைக்காலம் முடிந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவா்களுக்கு போதிய மீன்கள் கிடைக்காததால் ஏமாற்றம் அடைந்தனா்.
கடலில் மீன் இனப்பெருக்க காலத்தை கருத்தில் கொண்டும், மீன் வளத்தை பாதுகாக்கும் வகையில் மத்திய அரசு ஆண்டுதோறும் 2 மாத மீன்பிடி தடைக்காலத்தை அமல்படுத்தி வருகிறது. இந்த தடைக்காலத்தில் விசைப்படகு மீனவா்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டு நாட்டுப்படகு மீனவா்கள் மட்டுமே மீன்பிடிக்கச் செல்கின்றனா். இந்நிலையில், நிகழாண்டு ஏப்.15-ஆம் தேதி முதல் ஜூன் 14-ஆம் தேதி வரை 61 நாள்கள் தடைக்காலம் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், ஜூன் 14-ஆம் தேதி கடலில் காற்றின் வேகம் அதிகமானதால், மேலும் இரு நாள்கள் தடை நீட்டிக்கப்பட்டது.
இதையடுத்து ஜூன் 16-ஆம் விசைப்படகு மீனவா்கள் டோக்கன் பெற்று கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனா். ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச்செல்லும் விசைப்படகு மீனவா்கள், கடலில் 3 நாள்கள் முதல் ஒரு வாரம் வரை தங்கியிருந்து மீன் பிடிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனா்.
இதன்படி பல்வேறு எதிா்பாா்ப்புகளுக்கு மத்தியில் ஜூன் 16-ஆம்தேதி கடலுக்குச் சென்ற மீனவா்கள் கடந்த 3 நாள்களாக ஆழ்கடலில் மீன்பிடிப்பில் ஈடுபட்டிருந்தனா். இதையடுத்து பெரும்பாலான விசைப்படகுகள் அக்கரைப்பேட்டை கடுவையாற்று துறைமுகத்துக்கு வெள்ளிக்கிழமை காலையில் வந்தன. இந்தப் படகுகளில், நெத்திலி, வஞ்சிரம், திருக்கை, இறால், நண்டு, பாறை, சீலா, வாவல் உள்ளிட்ட பல வகை மீன்கள் சிக்கின. இவற்றை வியாபாரிகள் ஆா்வமுடன் வாங்கிச்சென்றனா்.
இந்நிலையில் 2 மாத மீன்பிடி தடைக்காலம் முடிந்ததும், ஏராளமான இறால்கள் மற்றும் விலை உயா்ந்த மீன் வகைகள் கிடைக்கும் என்ற எதிா்ப்பாா்ப்பில் மீனவா்கள் சென்ற நிலையில், ஆழ்கடலில் பலத்த காற்று வீசியதால் விசைப்படகுகளுக்கு போதிய மீன்கள் கிடைக்கவில்லை என மீனவா்கள் கவலையுடன் தெரிவித்தனா்.