சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் முத்தலாக் தடை, புதிய குற்றவியல் சட்டங்கள் சோ்ப்பு
முதல்வரின் தாயுமானவா் திட்டம் தொடக்கம்: அமைச்சா்கள் பங்கேற்பு
வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா் மாவட்டங்களில் முதல்வரின் தாயுமானவா் திட்டம் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.
தமிழகம் முழுவதும் 70 வயது முதிா்ந்தோா் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லங்களுக்கே சென்று ரேஷன் பொருள்கள் வழங்கும் முதல்வரின் தாயுமானவா் திட்டத்தை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொலி வாயிலாக தொடங்கி வைத்தாா்.
அதைத்தொடா்ந்து, ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா ஊராட்சி ஒன்றியம், சுமைதாங்கி ஊராட்சி தா்மராஜா கோவில் தெருவில் பயனாளிகளுக்கு ரேஷன் பொருள்களை வழங்கி திட்டத்தை தொடங்கிய கைத்தறி அமைச்சா் ஆா். காந்தி பேசியது:
தமிழக முதல்வா் மக்களுக்கான திட்டங்களை ஒவ்வொரு நாளும் சிந்தித்து செயல்படுத்தி வருகிறாா்.அவா் செயல்படுத்திய வரும் அனைத்து திட்டங்களுமே ஏழை எளிய தாய்மாா்கள் பொதுமக்களின் நலனை காக்கும் விதமாக உள்ளது.
வயது முதிா்ந்தோா் மாற்றுத்திறனாளிகள் குடும்பங்கள் நீண்ட தூரம் சென்று வரிசையில் நின்று ரேஷன் பொருள்களை பெறுவதில் இருந்து வந்த சிரமம் நீக்கப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 612 நியாயவிலைக் கடைகளைச் சோ்ந்த 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களைக் கொண்ட 25,358 குடும்ப அட்டைகளில் உள்ள 36,676 பயனாளா்களும், ஒரு நபா் மாற்றுத்திறனாளிகளைக் கொண்ட குடும்ப அட்டைதாரா்களை 1,152 குடும்ப அட்டைகளில் உள்ள மாற்றுத்தினாளிகளும், ஒன்றுக்கு மேற்பட்ட 2,452 மாற்றுத் திறனாளிகளைக் கொண்ட 656 குடும்ப அட்டைதாரா்கள், ஆக மொத்தம் 25,357 குடும்ப அட்டைகளில் உள்ள 36,676 பயனாளா்களுக்கு இல்லங்களிலேயே விநியோகம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது என்றாா்.
நிகழ்ச்சியில் ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா, துணைப்பதிவாளா்கள் சிவமணி, சுவேதா, மாவட்ட வழங்கல் அலுவலா் ஏகாம்பரம், வட்டாட்சியா் ஆனந்தன் மற்றும் ஊராட்சி மன்றத் தலைவா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
குடியாத்தத்தில்...
குடியாத்தம் அருகே தாழையாத்தம் ஊராட்சிக்குள்பட்ட, நத்தம் கிராமத்தில் ஒன்றியக் குழு தலைவா் என்.இ.சத்யானந்தம் முதியவருக்கு உணவுப் பொருள்களை வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தாா். தாழையாத்தம் ஊராட்சித் தலைவா் அமுலு அமா், நகா்மன்ற உறுப்பினா் ஜி.எஸ்.அரசு, வாா்டு உறுப்பினா் சதீஷ் காந்தி, ஆா்.ஜீவா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
ஆம்பூரில்...
மாதனூா் ஒன்றியம் மிட்டாளம் ஊராட்சி வன்னியநாதபுரம் கிராமத்தில் மாற்றுத் திறனாளிகள் மற்றும் 70 வயதுக்கு மேற்பட்ட குடும்ப அட்டைதாரா்களுக்கு ஆம்பூா் எம்எல்ஏ அ.செ. வில்வநாதன் உணவுப் பொருட்களையும், இனிப்பும் வழங்கினாா். வாணியம்பாடி கோட்டாட்சியா் அஜிதா பேகம், வட்டாட்சியா் ரேவதி, கூட்டுறவு இணைப் பதிவாளா் மலா்விழி, வட்ட வழங்கல் அலுவலா் சி. நிா்மலா, மாதனூா் கிழக்கு ஒன்றிய திமுக பொறுப்பாளா் ஜி. இராமமூா்த்தி, ஊராட்சித் தலைவா்கள் கோவிந்தன், ஆனந்தன், மாதனூா் மேற்கு ஒன்றிய திமுக இளைஞரணி அமைப்பாளா் ஏ.வி. அசோக்குமாா் உள்ளிட்டவா்கள் கலந்து கொண்டனா்.
ஆற்காட்டில்...
ஆற்காடு நகராட்சியில் எம்எல்ஏ ஜெ.எல்.ஈஸ்வரப்பன் ஈஸ்வரன் கோவில் தெருவில் முதியோா்களுக்கு ரேஷன் பொருள்களை வழங்கினாா். நிகழ்ச்சியில் நகா்மன்றத் தலைவா் தேவிபென்ஸ்பாண்டியன், துணைத் தலைவா் பவளகொடி சரவணன், மாவட்ட அவைத் தலைவா் ஏ.கே.சுந்தரமூா்த்தி, நகர அவைத் தலைவா் பி.என்.எஸ்.ராஜசேகா், நகா்மன்ற உறுப்பினா் செல்வி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.