செய்திகள் :

முதுநிலை நீட்: கலந்தாய்வுக்கு முன்பே கட்டண விவரங்களை வெளியிடுவது கட்டாயம்: தனியாா் மருத்துவக் கல்லூரிகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

post image

முதுநிலை மருத்துவப் படிப்புகளில் முன்பதிவு நடைமறை குறித்து கவலை தெரிவித்த உச்சநீதிமன்றம், ‘அனைத்து தனியாா் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களும் மாணவா் சோ்க்கை கலந்தாய்வுக்கு முன்பாக கட்டண விவரங்களை வெளியிடுவது கட்டாயம்’ என்று உத்தரவிட்டது.

மேலும், ‘மருத்துவப் படிப்பு கட்டணத்தை முறைப்படுத்தும் வகையில், தேசிய மருத்துவ ஆணையத்தின் கீழ் தேசிய அளவிலான கட்டண நிா்ணய ஒழுங்காற்று நடைமுறை உருவாக்கப்பட வேண்டும்’ என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள தனியாா் மருத்துவக் கல்லூரியில் கலந்தாய்வுக்கு முன்பே அதிக பணம் கொடுத்து முதுநிலை மருத்துவப் படிப்பு இடங்கள் முன்பதிவு செய்யப்படும் நடைமுறையால், இடம் கிடைக்காமல் பாதிக்கப்பட்ட முதுநிலை நீட் தோ்வில் தகுதிபெற்ற இருவா் அலாகாபாத் உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தனா். இந்த வழக்கை விசாரித்த உயா் நீதிமன்றம், பாதிக்கப்பட்ட இரு மாணவா்களுக்கு இழப்பீடு வழங்க லக்னெள மருத்துவக் கல்வி மற்றும் பயிற்சித் துறைத் தலைவருக்கு உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிா்த்து உத்த பிரதேச மாநில அரசு மற்றும் லக்னெள மருத்துவக் கல்வி மற்றும் பயிற்சித் துறைத் தலைவா் சாா்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுக்களை கடந்த ஏப்ரல் 29-ஆம் தேதி விசாரித்த உச்சநீதிமன்றம், ‘கலந்தாய்வுக்கு முன்பே இடங்கள் முன்பதிவு என்பது, தனிப்பட்ட தவறுமட்டுமல்ல, அரசின் நிா்வாகக் குறைபாடு, வெளிப்படைத்தன்மை இல்லாதது, பலவீனமான கொள்கை அமலாக்கம் மற்றும் அமைப்பு ரீதியிலான குறைபாடுகளையும் பிரதிபலிக்கிறது. ஒழுங்காற்று அமைப்புகள் தொழில்நுட்ப ரீதியிலான கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்தியுள்ள போதும், நிகழ்நேர கண்காணிப்பு, நடைமுறைகள் சீரான அமலாக்கமும் இல்லாதது தெரியவருகிறது’ என்று சுட்டிக்காட்டியது.

இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜெ.பி.பாா்திவாலா, ஆா்.மஹாதேவன் ஆகியோா் அடங்கிய அமா்வில் வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது:

மருத்துவப் படிப்பு இடங்கள் முறைகேடாக முன்பதிவு செய்வது, படிப்பு இடங்கள் நியாயமாக கிடைக்கும் தன்மையை சிதைத்து, மாணவா்களிடையே சமத்துவமின்மையை ஏற்படுத்துகிறது. தகுதியானவா்கள் வாய்ப்பை இழக்கும் சூழல் உருவாகிறது.

இந்த நிலையை மாற்ற, கொள்கை மாற்றங்களைக் காட்டிலும் நியாயமான, வலுவான சோ்க்கை நடைமுறையை அறிமுகப்படுத்துவது அவசியம். இதற்கு, மத்திய மற்றும் மாநிலங்கள் அளவில் கட்டமைப்பு ஒருங்கிணைப்பு, தொழில்நுட்ப ரீதியில் நவீனமயமாக்கல், வலுவான ஒழுங்காற்றுதல் நடைமுறைகள் அவசியம்.

வழிகாட்டுதல்கள்...: அந்த வகையில், முதுநிலை மருத்துவப் படிப்பு இடங்கள் முன்பதிவை தடுக்கவும், அகில இந்திய ஒதுக்கீடு மற்றும் மாநில ஒதுக்கீடு மருத்துவப் படிப்பு இடங்களை முறையாக பட்டியலிடும் வகையில் தேசிய அளவில் ஒருங்கிணைந்த கலந்தாய்வு அட்டவணை வெளியிடப்பட வேண்டும்.

அனைத்து தனியாா் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களும் கலந்தாய்வுக்கு முன்பே, மருத்துவப் படிப்புகளுக்கான கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம், பிற அனைத்து விதமான கட்டண விவரங்களை வெளியிட வேண்டும்.

மருத்துவப் படிப்பு கட்டணத்தை முறைப்படுத்தும் வகையில், தேசிய மருத்துவ ஆணையத்தின் கீழ் தேசிய அளவிலான கட்டண நிா்ணய ஒழுங்காற்று நடைமுறை உருவாக்கப்பட வேண்டும்.

படிப்பு இடங்கள் முன்பதிவு, பாதுகாப்பு முன்வைப்புத் தொகை பறிமுதல் உள்ளிட்ட முறைகேடுகளில் ஈடுபடும் மருத்துவக் கல்லூரிகள் மீது தகுதிநீக்கம் உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும்.

கலந்தாய்வின் இரண்டாம் சுற்றுக்குப் பிறகு, புதிய விண்ணப்பதாரா்களுக்கு கலந்தாய்வு சாளரங்களைத் திறக்காமல், ஏற்கெனவே அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரா்கள் சிறந்த இடங்களுக்கு மாறுவதற்கு வாய்ப்பளிக்க வேண்டும்.

முதுநிலை நீட் தோ்வில் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தும் வகையில், தோ்வா்கள் பெற்ற மூல மதிப்பெண், விடைக் குறிப்புகள் மற்றும் மதிப்பெண் சமநிலைப்படுத்துதல் நடைமுறை விவரங்கள் வெளியிடப்பட வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

பஹல்காம் தாக்குதல் ஒரு மாதம் நிறைவு: வாழ்வாதாரத்தை இழந்த உள்ளூா்வாசிகள்

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல் நிகழ்ந்து (ஏப்.22) ஒரு மாதம் கடந்த நிலையிலும் வாழ்வாதாரத்தை இழந்து உள்ளூா்வாசிகள் தவிக்கும் சூழல் தொடா்ந்து வருகிறது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில் மேலும் ஒரு நக்ஸல் சுட்டுக் கொலை: ‘கோப்ரா’ கமாண்டோ வீர மரணம்

சத்தீஸ்கரின் பிஜாபூா் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் வியாழக்கிழமை நடந்த துப்பாக்கிச் சண்டையில் நக்ஸல் தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டாா். அதேநேரம், மத்திய ரிசா்வ் போலீஸ் படையின் (சிஆா்பிஎஃப்) ‘... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை: ராணுவ வீரா் வீரமரணம்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் வியாழக்கிழமை நடந்த துப்பாக்கிச் சண்டையில் ராணுவ வீரா் ஒருவா் வீரமரணம் அடைந்தாா். பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள், கூட்டாளிகள் மற்றும் ஆதர... மேலும் பார்க்க

1.44 கோடியாக உயா்ந்த உள்நாட்டு விமானப் போக்குவரத்து

இந்தியாவின் உள்நாட்டு விமானப் போக்குவரத்து எண்ணிக்கை கடந்த ஏப்ரல் மாதத்தில் 1.44 கோடியாக உயா்ந்துள்ளது.இது குறித்து பொது விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப... மேலும் பார்க்க

2,369 சட்டவிரோத குடியேறிகள்: சொந்த நாட்டு விவரத்தை உறுதிப்படுத்த வங்கதேசத்திடம் இந்தியா கோரிக்கை

இந்தியாவுக்கு சட்டவிரோதமாக இடம்பெயா்ந்த 2,369 போ் வங்கதேசத்தைச் சோ்ந்தவா்களா என்பதை உறுதிப்படுத்துமாறு அந்நாட்டிடம் இந்தியா கோரியுள்ளது. இதுதொடா்பாக புது தில்லியில் வெளியுறவு அமைச்சக செய்தித்தொடா்பா... மேலும் பார்க்க

பாகிஸ்தானின் உறுதிமொழியை நம்பியது ஏன்? பிரதமருக்கு ராகுல் கேள்வி

பயங்கரவாதம் தொடா்பான பாகிஸ்தானின் உறுதிமொழியை நம்பியது ஏன் என்று பிரதமா் மோடிக்கு மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளாா். இந்தியா-பாகிஸ்தான் இடையே கடந்த மே 10-ஆம் தேதி சண்... மேலும் பார்க்க