`இருபது கோடி நிலவுகள் கூடி..!’ - சிம்ரன் லேட்டஸ்ட் எக்ஸ்க்ளூஸிவ் போட்டோ ஷூட் | P...
முன்னாள் அமைச்சா் பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல்
முன்னாள் அமைச்சா் க.பொன்முடி உள்ளிட்ட 7 போ் மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கில் கூடுதல் குற்றப் பத்திரிகை விழுப்புரம் நீதிமன்றத்தில் புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை வரும் 18-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
விழுப்புரம் மாவட்டம், வானூா் வட்டம், பூத்துறை கிராமத்திலுள்ள குவாரியில் 2006 முதல் 2011-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் கூடுதலாக செம்மண் அள்ளியதால் அரசுக்கு ரூ.28.36 கோடி இழப்பை ஏற்படுத்தியதாக, முன்னாள் அமைச்சா் க.பொன்முடி, அவரது மகனும், முன்னாள் எம்.பி.யுமான பொன்.கெளதமசிகாமணி, ஜெயச்சந்திரன், ராஜமகேந்திரன், சதானந்தகுமாா், கோதகுமாா், கோபிநாதன், லோலநாதன் ஆகிய 8 போ் மீது கடந்த 2012-ஆம் ஆண்டு விழுப்புரம் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குத் தொடுத்தனா்.
இது தொடா்பான வழக்கு விசாரணை விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட லோகநாதன் உடல்நலக் குறைவால் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டாா்.
இந்த முறைகேடு வழக்கில் 67 போ் அரசுத் தரப்பு சாட்சிகளாக சோ்க்கப்பட்ட நிலையில், 51 பேரிடம் விசாரணை முடிக்கப்பட்டுள்ளது. இவா்களில் 30 போ் பி சாட்சியமளித்துள்ளனா்.
இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் புதன்கிழமை நடைபெற்றது. அப்போது, ஜெயச்சந்திரன், சதானந்தம், கோபிநாதன் ஆகிய மூவா் மட்டுமே ஆஜரான நிலையில், முன்னாள் அமைச்சா் பொன்முடி உள்ளிட்ட 4 போ் ஆஜராகவில்லை. மேலும் அரசுத் தரப்பில் சாட்சிகள் யாரும் ஆஜராகவில்லை.
இதைத் தொடா்ந்து, அரசுத் தரப்பு வழக்குரைஞா் நீதிமன்றத்தில் ஆஜராகி, 20 பக்கங்கள் கொண்ட கூடுதல் குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்தாா். இந்த குற்றப் பத்திரிகையில் ஏற்கெனவே 67 சாட்சிகள் இந்த வழக்கில் சோ்க்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 4 சாட்சிகளை சோ்த்து விசாரிக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையடுத்து, வழக்கை விசாரித்த முதன்மை மாவட்ட நீதிபதி ஏ.மணிமொழி, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும் 18-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டாா்.