கடலூர் பள்ளி வேன் விபத்து: ``சுரங்கப்பாதை அமைக்க ஓராண்டாக கலெக்டர் அனுமதி தராததே...
மும்பை: ராஜ் தாக்கரே கட்சியினர் போராட்டம்; சிவசேனா அமைச்சர் மீது தாக்குதல்.. என்ன நடந்தது?
மும்பை மீரா பயந்தர் பகுதியில் செயல்பட்டு வரும் ஜோத்பூர் ஸ்வீட்ஸ் என்ற கடையில் பணியாற்றிய ஊழியர் மராத்தி பேசாததால் அவரை மராத்தி பேசச்சொல்லி ராஜ் தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனாவினர் அடித்தனர்.

இதை எதிர்த்து கேட்ட கடை உரிமையாள பாபுலால், அனைத்து மொழிகளும் பேசப்படுவதாக கூறி வாக்குவாதம் செய்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவ ஆரம்பித்தது. இத்தாக்குதலை கண்டித்து மீராபயந்தர் பகுதியில் கடைக்காரர்கள் போராட்டம் நடத்தினர்.
இப்போராட்டத்தை தொடர்ந்து நவநிர்மாண் சேனாவினரும் எதிர்ப்போராட்டத்திற்கு இன்று அழைப்பு விடுத்து இருந்தனர். இப்போராட்டத்திற்கு போலீஸார் அனுமதி கொடுக்கவில்லை. ஆனாலும் இன்று காலையில், தாங்கள் திட்டமிட்ட வழித்தடத்தில் போராட்ட பேரணியை நவநிர்மாண் சேனாவினர் நடத்தினர். இதையடுத்து போராட்டத்தில் பங்கேற்கவர்களை கைது செய்த போலீஸார் வாகனத்தில் ஏற்றினர்.
இப்பேரணி நடந்து கொண்டிருந்தபோது அங்கு சிவசேனா அமைச்சர் பிரதாப் சர்நாயக் அங்கு வந்தார். அவரும் பேரணியில் பங்கேற்க முயன்றார். ஆனால் அவருக்கு எதிராக போராட்டத்தில் பங்கேற்றவர்கள் கோஷமிட்டனர். நிலைமை விபரீதமானதை தொடர்ந்து அமைச்சர் பிரதாப் சர்நாயக்கை போலீஸார் அங்கிருந்து பத்திரமாக வெளியேற்றினர்.
இதில் போராட்டத்தில் பங்கேற்ற சிலர் தண்ணீர் பாட்டிலை எடுத்து வீசினர். போலீஸாரின் எதிர்ப்பையும் மீறி பேரணி நடத்தப்பட்டது. இதில் ராஜ் தாக்கரே கட்சியினர் மற்றும் சிவசேனா(உத்தவ்) கட்சி தொண்டர்கள் மற்றும் மராத்தியர்கள் திரளாக கலந்து கொண்டனர். அமைச்சர் பிரதாப் சர்நாயக்கை போராட்டக்காரர்கள் துரோகி என்று கூறி கோஷமிட்டனர்.

இப்போராட்டம் குறித்து கருத்து தெரிவித்த முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், மகாராஷ்டிராவில் போராட்டம் நடத்துவதற்கு ஒவ்வொருவருக்கும் உரிமை இருக்கிறது. போலீஸாரிடம் அனுமதி வாங்கிக்கொண்டு போராட்டம் நடத்தலாம். போக்குவரத்து பிரச்னை, கூட்ட நெரிசல் போன்ற பிரச்னைகள் இருக்கிறது.
மீராபயந்தரில் போராட்டத்தில் கலந்து கொண்டவர்களிடம் வழித்தடத்தை மாற்றிக்கொள்ளும்படி மீராபயந்தர் கமிஷனர் கேட்டுக்கொண்டுள்ளார். ஆனால் அவர்கள் வழித்தத்தை மாற்ற மறுத்துவிட்டனர். இதையடுத்து போராட்டக்காரர்களை கைது செய்தனர். மகாராஷ்டிரா மக்களை பற்றி எனக்கு தெரியும். இது போன்ற செயல்கள் அவர்களிடம் எடுபடாது. மராத்தி மக்கள் பரந்த மனம் படைத்தவர்கள்''என்று தெரிவித்தார்.
மாநில அரசு பள்ளியில் 1-5வது வகுப்பு வரை இந்தி கட்டாயம் என்ற ஒரு உத்தரவை சமீபத்தில் பிறப்பித்தது. இவ்வுத்தரவை தொடர்ந்து ராஜ் தாக்கரே மற்றும் உத்தவ் தாக்கரே ஆகியோர் மராத்திக்கு ஆதரவாகவும், மும்மொழி கொள்கைக்கு எதிராகவும் போர்க்கொடி தூக்கினர். இதற்காக போராட்டமும் அறிவித்தனர். ஆனால், அரசு திடீரென இந்தி திணிப்பு தொடர்பான உத்தரவை ரத்து செய்தது.
எனவே, தாக்கரே சகோதரர்கள் இரண்டு பேரும் சேர்ந்து வெற்றி பொதுக்கூட்டம் ஒன்றை மும்பையில் நடத்தினர். தற்போது நடந்திருக்கும் போராட்டத்திலும் தாக்கரே சகோதரர்களின் இரு கட்சிகளும் சேர்ந்து நடத்தின. இதை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.

மும்பை மாநகராட்சி தேர்தலுக்காக தாக்கரே சகோதரர்கள் ஒன்று சேர்ந்து இருப்பதாக தெரிவித்தார். ராஜ் தாக்கரே கடந்த மக்களவை தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க கூட்டணியில் சேர முயன்றார். இதற்காக டெல்லி சென்று மத்திய அமைச்சர் அமித் ஷாவையும் சந்தித்து பேசினார். ஆனாலும் ராஜ் தாக்கரே கட்சியை பா.ஜ.க கடைசி நேரத்தில் கழற்றிவிட்டுவிட்டது. இதையடுத்து தனித்து போட்டியிட்டு தோல்வியை சந்தித்தார். அதனை தொடர்ந்தே இப்போது உத்தவ் தாக்கரேயுடன் ராஜ் தாக்கரே 20 ஆண்டுகளுக்கு பிறகு கைகோர்க்க ஆரம்பித்து இருக்கிறார்.