மெட்டா நிறுவனத்தில் 3,000 பேர் பணி நீக்கம்!
பணித்திறன் சார்ந்த நடவடிக்கையாக, மெட்டா நிறுவனம், பல்வேறு நாடுகளில் இயங்கி வரும் தனது நிறுவனத்தில் பணியாற்றும் சுமார் 3,600 பணியாளர்களை பணி நீக்கம் செய்யவிருக்கிறது.
நாளை முதல், பணி நீக்க நடவடிக்கை தொடங்குவதாகவும், ஊழியர்களுக்கு மின்னஞ்சல் மூலம் பணி நீக்கம் செய்யப்பட்டதற்கான தகவல் அனுப்பிவைக்கப்பட்டு, நிறுவனத்துக்குள் அவர்களது ஆக்ஸஸ் அட்டை செயல்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
இந்த நடவடிக்கை, ஐரோப்பா, ஆசிய பசிபிக், அமெரிக்காவில் உள்ள நிறுவனங்களில் பணியாற்றும் பணியாளர்களை வெகுவாக பாதிக்கும் என்றும் கூறப்படுகிறது.
பணி நீக்கம் செய்யப்பட்டதற்கான அறிவிப்பாணை கிடைக்கப்பெற்ற ஒரு சில மணி நேரங்களில் அவர்களுக்கு நிறுவனத்துக்குள் ஆக்ஸஸ் அட்டை செயலிழந்து போகும் என்றும், மெட்டா நிறுவனத்தின் மனிதவளத் துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
இந்த பணி நீக்க நடவடிக்கையானது பிப்ரவரி 11 முதல் 18 வரை நடைபெறும் என்றும், பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள், தற்போதைக்கு நிறுவனத்துக்குள் வேறு பணிகளுக்கு இடமாற்றம் கோர முடியாது என்றும், அவர்களது பணி நீக்க இறுதி தேதிக்குப் பிறகு, இதே நிறுவனத்தில் வேறு ஏதேனும் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.