யானைகள் தாக்கியதில் வயதான தம்பதி பலி!
ஒடிசா மாநிலம் காலாஹாண்டி மாவட்டத்தில் யானைக் கூட்டம் தாக்கியதில் உறங்கிக்கொண்டிருந்த வயதான கணவன் மற்றும் அவரது மனைவி பலியாகியுள்ளனர்.
காலாஹாண்டியின் கடோமாலி கிராமத்தைச் சேர்ந்த மகுன் மஜ்ஹி (வயது 70) மற்றும் அவரது மனைவி கடா மஜ்ஹி (65) ஆகியோர் வனப்பகுதிக்கு அருகிலுள்ள நிலத்தில் விவசாயம் செய்து வந்ததுள்ளனர். இந்நிலையில், கடந்த பிப்.1 அன்று இரவு அவர்களது மண் வீட்டில் தங்களது குடும்பத்தினருடன் அவர்கள் இருவரும் உறங்கிக்கொண்டிருந்தனர். அப்போது, அங்குள்ள வனப்பகுதியிலிருந்து யானைக்கூட்டம் அவர்களது கிராமத்திற்குள் புகுந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, அந்த யானைகள் மகுனின் மண் வீட்டை இடித்து தகர்த்ததுடன், உறங்கிக்கொண்டிருந்த மகுன் மற்றும் அவரது மனைவி கடாவை தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில், அவர்கள் இருவரும் சம்பவ இடத்திலயே பலியானார்கள்.
இதையும் படிக்க: மக்களவையில் எதிர்க்கட்சிகள் முழக்கத்துக்கு இடையே அவை நடவடிக்கை!
இந்த தாக்குதலில் வீட்டில் அவர்களோடு உறங்கிக்கொண்டிருந்த மகுனின் மகன் மற்றும் 3 சகோதரர்கள் அதிர்ஷடவசமாக உயிர்தப்பினர்.
இதுகுறித்து தகவலறிந்த சம்பவ இடத்துக்கு விரைந்த அப்பகுதி வனத்துறை மற்றும் காவல் துறை அதிகாரிகள் கூறியதாவது, இந்த சம்வம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், பலியான தம்பதியின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
முன்னதாக, நர்லா மற்றும் பிஸ்வனாத்பூர் வனப்பகுதிகளுக்கு மிக அருகாமையில் அந்த கிராமம் அமைந்துள்ளதால் காட்டு யானைகளின் தாக்குதல் அங்கு அதிகரித்துள்ளது. இதற்கு முன்னர், யானைகள் தாக்கியதில் நர்லா வனத்துறை அதிகாரி ஒருவர் உள்பட பலர் பலியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.