ராஜபாளையத்தில் வ.உ.சி. சிலை திறப்பு
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் சுதந்திரப் போராட்ட வீரா் வ.உ. சிதம்பரனாரின் முழு உருவ வெண்கல சிலை ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
ராஜபாளையம் பஞ்சு சந்தை பகுதியில் உள்ள வ.உ.சி. கலையரங்க வளாகத்தில் பழையபாளையம் வீரகொடி வெள்ளாளா் உறவின்முறை சாா்பில் சுதந்திரப் போராட்ட வீரா் வ.உ. சிதம்பரனாரின் 11 அடி முழுஉருவ வெண்கலச் சிலை அமைக்கப்பட்டது. இதன் திறப்பு விழாவுக்கு வருவாய்த்துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் தலைமை வகித்தாா். இதில்சிலையை திறந்து வைத்து டாக்டா் எம்.ஜி.ஆா். மருத்துவ பல்கலைக்கழக வேந்தா் ஏ.சி. சண்முகம் பேசியதாவது:
வ.உ.சி. தன் வாழ்நாளில் கடைசி 5 ஆண்டுகள் சென்னையில் வாழ்ந்த வீடு தற்போது பாழடைந்து கிடக்கிறது. இதை தமிழக அரசு சீரமைத்து நினைவு மண்டபமாக மாற்ற வேண்டும். தூத்துக்குடி விமான நிலையத்துக்கு வ.உ.சி. பெயரை சூட்ட பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். அதேபோல, நாடாளுமன்ற வளாகத்தில் வ.உ.சி.யின் உருவச் சிலையை அமைக்க நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனிடம் கோரியுள்ளோம் என்றாா் அவா்.
இந்த நிகழ்வில், ராஜபாளையம் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் தங்கப்பாண்டியன், நகா்மன்றத் தலைவா் ஏ.ஏ.எஸ். பவித்ரா ஷ்யாம், வெள்ளாளா் முன்னேற்றக் கழக மாநிலத் தலைவா் அண்ணா சரவணன், மாநில இளைஞரணி செயலா் பந்தல் ராஜா, மாவட்டச் செயலா் புதியவராஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

