பெங்களூரு ஏசி விரைவு ரயிலில் 11 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து!
ராமேசுவரம் மீனவர்கள் 11 பேர் கைது!
ராமேசுவரம்: கச்சத்தீவு - நெடுந்தீவுக்கு இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரத்தைச் சேர்ந்த 11 மீனவர்கள் மற்றும் அவர்களின் விசைப்படகை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் இருந்து 454 விசைப்படகுகளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அனுமதி பெற்று புதன்கிழமை கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.
கச்சத்தீவு – நெடுந்தீவக்கு இடையே நள்ளிரவில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும்போது ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் ஒரு விசைப்படகை சிறைபிடித்தனர்.
அந்த படகில் பாக்கிய ராஜ் 38, சவேரியார் அடிமை 35, முத்து களஞ்சியம் 27, எபிரோன் 35, ரஞ்சித் 33, பாலா 38, யோவான்ஸ் நானன், இன்னாசி 37, ஆர்னாட் ரிச்சே 36, அன்றன் 45, அந்தோணி சிசோரியன் 43 ஆகிய 11 மீனவர்களை கைது செய்து காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்றனர்.
11 மீனவர்கள் மீது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக வழக்கு பதிந்து சிறையில் அடைக்க உள்ளதாக இலங்கை மீன்வளத்துறை(நீரியல்துறை) அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து மீனவ சங்கத் தலைவர் காரல் மார்க்ஸ் கூறுகையில்:
”தமிழகத்தில் இருந்து வாழ்வாதாரத்திற்காக மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்களை தொடர்ந்து இலங்கை கடற்படையினர் கைது செய்து வருகின்றனர். இலங்கையில் உள்ள மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடர்ந்து வலியுருத்தி வருகிறோம்.
இதே கோரிக்கையை வலியுருத்தி இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரை சந்தித்துள்ளோம். பிரதமர் ஏப்ரல் 5 ஆம் தேதி இலங்கை செல்லவுள்ள நிலையில் மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக மீனவர்கள் பாரம்பரியமாக மீன்பிடித்த இடத்தில் மீன்பிடிக்க உரிய அனுமதியை பெற்றுத்தர வேண்டும்” எனக் கோரிக்கை விடுத்தார்.