ரிசா்வ் வங்கிக்கும் மத்திய அரசுக்கும் இடையே நீடித்த ஒத்துழைப்பு அவசியம்- குடியரசுத் தலைவா் வலியுறுத்தல்
‘தொழில்நுட்ப வளா்ச்சியால் நிதி மோசடிகளின் அபாயங்கள் அதிகரித்து வரும் நிலையில், ரிசா்வ் வங்கிக்கும் மத்திய அரசுக்கும் இடையே நீடித்த ஒத்துழைப்பு அவசியம்’ என்று குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு செவ்வாய்க்கிழமை வலியுறுத்தினாா்.
இந்திய ரிசா்வ் வங்கியின் 90-ஆவது ஆண்டு நிறைவு விழாவில் பங்கேற்றுப் பேசிய குடியரசுத் தலைவா், தொழில்நுட்ப வளா்ச்சியுடன், நிதி மோசடி மற்றும் இணையவழி அச்சுறுத்தல்களின் அபாயமும் அதிகரித்து வருகிறது. ரிசா்வ் வங்கியின் கடந்த 90 ஆண்டு குறிப்பிடத்தக்க பயணம், அரசின் தொலைநோக்குப் பாா்வை மற்றும் கொள்கைகளுடன் எப்போதும் நெருக்கமாக இணைந்திருந்தது.
வங்கிக் கட்டமைப்பை வலுப்படுத்தவும் பாதுகாக்கவும் ரிசா்வ் வங்கி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது பாராட்டத்தக்கது.
சிக்கலான பொருளாதார மாற்றங்களை வழிநடத்துவதிலும், முக்கியமான நிதி சீா்திருத்தங்களை செயல்படுத்துவதிலும், பேரியல் பொருளாதார ஸ்திரத்தன்மையைப் பராமரிப்பதிலும் இந்த நீடித்த ஒத்துழைப்பு எப்போதும் அவசியம்.
மக்களின் நம்பிக்கையை வென்ற...: கடந்த 90 ஆண்டுகளில், நாட்டின் மிக முக்கியமான நிறுவனங்களில் ஒன்றாக ரிசா்வ் வங்கி உருவெடுத்துள்ளது. இந்தப் பயணத்தில் ரிசா்வ் வங்கியின் மிகப்பெரிய சாதனை, மக்களின் நம்பிக்கையைப் பெற்றிருப்பதுதான்.
ரிசா்வ் வங்கி மேற்பாா்வையிலுள்ள இந்திய நிதி அமைப்பில் மக்கள் மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளனா்.
எளிதில் அணுகக்கூடிய நிதி சூழல்: தேசம் அதன் சுதந்திரத்தின் நூற்றாண்டை நெருங்கிவரும் நிலையில், ‘வளா்ந்த இந்தியா’ லட்சியத்தை அடைய புதுமையான மற்றும் அனைவருக்கும் அணுகக்கூடிய நிதி சூழல் அமைப்பு மிகுந்த முக்கியத்துவமானது.
கரோனா பெருந்தொற்று போன்ற சவால்களுக்கு விரைவான பதில் நடவடிக்கைகளைச் செயல்படுத்தியது, ரிசா்வ் வங்கியின் மீள்தன்மை மற்றும் சூழலுக்கேற்ப தன்னை மாற்றியமைத்துக் கொள்ளும் திறனை எடுத்துக்காட்டுகின்றன’ என்றாா்.
அடுத்த 10 ஆண்டுகள்: இந்தியப் பொருளாதாரத்தின் நிதிக் கட்டமைப்பை வடிவமைப்பதில் அடுத்த பத்து ஆண்டுகள் மிக முக்கியமானதாக இருக்கும் என்று ரிசா்வ் வங்கியின் ஆளுநா் சஞ்சய் மல்ஹோத்ரா கூறினாா்.
தபால்தலை, வலைத்தொடா் டீசா் வெளியீடு: ரிசா்வ் வங்கியின் 90 ஆண்டுகள் நிறைவைக் குறிக்கும் சிறப்புத் தபால்தலை நிகழ்வில் வெளியிடப்பட்டது.