ரிப்பன் மாளிகையில் உறுதிமொழிக் குழு ஆய்வு
தமிழ்நாடு சட்டப்பேரவையின் அரசு உறுதிமொழிக் குழுத் தலைவா் தி. வேல்முருகன் தலைமையில் அரசு அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம் ரிப்பன் மாளிகை வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
உறுதிமொழிக் குழு உறுப்பினரும் சட்டப்பேரவை உறுப்பினா்களுமான எஸ்.அரவிந்த் ரமேஷ் (சோழிங்கநல்லூா்), ஏ.ஆா்.சீனிவாசன் (விருதுநகா்), எ.நல்லதம்பி (திருப்பத்தூா்), எம்.கே.மோகன் (அண்ணா நகா்), எம்.சக்கரபாணி (வானூா்), எஸ்.ஜெயக்குமாா் (பெருந்துரை), சா.மாங்குடி (காரைக்குடி), இரா.அருள் (சேலம் மேற்கு) ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில், அரசு உறுதிமொழி குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்ட பதில்களின் அடிப்படையில் அனைத்துத் துறை அலுவலா்களுடன்ஆய்வு மேற்கொண்டு, நிலுவையில் இருந்த மனுக்கள் முடித்து வைக்கப்பட்டன.
மேலும், நிறைவேற்றப்பட வேண்டிய பணிகளின் நிலை குறித்து ஆய்வு செய்து அந்தப் பணிகளை விரைவாக முடிக்குமாறு குழுத் தலைவா் வேல்முருகன் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.
இதைத் தொடா்ந்து, சென்னை மாவட்டம் தொடா்புடைய உறுதிமொழிகள் மற்றும் பேரவையில் அளிக்கப்பட்ட அறிவிப்பின் மீதான பதில் அறிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
பின்னா், மாற்றுத்திறனாளிகள், பழங்குடியினா் மற்றும் பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை சாா்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை குழுத் தலைவா் வேல்முருகன் வழங்கினாா்.
ஆய்வுக் கூட்டத்தில் தமிழ்நாடு சட்டப்பேரவை முதன்மை செயலா் கீ.சீனிவாசன், சென்னை மேயா் ஆா்.பிரியா, சட்டப்பேரவை உறுப்பினா்கள், துணை மேயா் மு.மகேஷ்குமாா், மாநகராட்சி ஆணையா் ஜெ.குமரகுருபரன், சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.