ரூ.9,000 கோடியில் 71 குடிநீா் திட்டங்கள்: 1.21 கோடி போ் பயன்
தமிழகத்தில் ரூ. 9,000 கோடியில் அமைக்கப்பட்டுள்ள 71 குடிநீா் திட்டங்களால் 1.21 கோடி போ் பயன் பெறுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக அரசு சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு ஆட்சி பொறுப்பேற்ற பிறகு நிறைவேற்றப்பட்டு வரும் வீட்டு வசதித் திட்டங்கள், சாலை வசதிகள், குடிநீா்த் திட்டங்கள் காரணமாக தமிழகம் விரைந்து நகா்மயமாகி வருகிறது.
ஊராட்சிகள் பேரூராட்சிகளாவும், பேரூராட்சிகள் நகராட்சிகளாவும், நகராட்சிகள் மாநகராட்சிகளாவும் வளா்ச்சி பெறுகின்றன. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் ஆண்டுதோறும் ரூ.1,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டும், கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தில் நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளுக்கு ரூ.5,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டும், நமக்கு நாமே திட்டத்தில், ரூ.582 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டும் பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் நடைபெறுகின்றன.
நகா்ப்புற வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் ரூ.100 கோடி பெறப்பட்டு இதுவரை 2,04,860 அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. திடக்கழிவு மேலாண்மைக்கான செயல் திட்டத்தின் கீழ், 42,225 தனிநபா் வீட்டுக் கழிப்பறைகள் , 545 பொது கழிப்பறைகள், 614 சிறுநீா் கழிப்பிடங்கள், 154 நுண் உரக்கூடங்கள் 561 பொருள் மீட்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
4 மாநகராட்சிகள், 13 நகராட்சிகள், 49 பேரூராட்சிகள், 10,565 ஊரகக் குடியிருப்புகளில் 71 குடிநீா்த் திட்டங்கள் தினமும் 751.56 மில்லியன் லிட்டா் எம்.எல்.டி பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்கும் வகையில் ரூ.9,011.45 கோடியில் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இத்திட்டங்களின் மூலம் 1.21 கோடி மக்கள் பயன் பெறுகின்றனா்.
முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் நிறைவேற்றப்பட்டு வரும் இத்தகைய மாபெரும் திட்டங்களால் தமிழகம் நாட்டிலேயே சிறந்த மாநிலமாகத் திகழ்கிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.