வங்கக் கடலில் மே 27-இல் புயல் சின்னம் உருவாக வாய்ப்பு
வங்கக் கடலில் வரும் மே 27-ஆம் தேதி காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி (புயல் சின்னம்) உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்தி: மத்திய மேற்கு மற்றும் அதையொட்டிய வடக்கு வங்கக் கடலில் வரும் 27-ஆம் தேதி காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி (புயல் சின்னம்) உருவாக வாய்ப்புள்ளது. இந்தப் புயல் சின்னம் மேலும் வலுவடைந்து வடக்கு திசை நோக்கி நகரும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இது புயலாக மாறினால், இதற்கு தாய்லாந்தின் பரிந்துரையின்படி ‘மந்தா’ எனப் பெயரிடப்படும்.
கனமழை எச்சரிக்கை: இதற்கிடையே, காற்று குவிதல் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் வெள்ளிக்கிழமை (மே 23) முதல் மே 28-ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
குறிப்பாக மே 24 முதல் மே 26-ஆம் தேதி வரை கோவை மாவட்டத்தின் மலைப் பகுதிகளிலும், நீலகிரி மாவட்டத்திலும் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புகா் பகுதிகளில் மே 23-இல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
2 இடங்களில் வெயில் சதம்: தமிழகத்தில் வியாழக்கிழமை பகல் நேரத்தில் அதிகபட்சமாக தூத்துக்குடியில் 101.12 டிகிரி ஃபாரன்ஹீட், பாளைக்கோட்டையில் 100.4 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது.
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் மே 23-இல் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும். மே 24 முதல் மே 26-ஆம் தேதி வரை வெப்பநிலை சற்று குறையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.