எய்ம்ஸ் மருத்துவமனைகளில் 3,496 பாராமெடிக்கல் பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
வாக்குச்சாவடி அதிகாரிகளை அச்சுறுத்தும் மம்தா: தோ்தல் ஆணையத்தில் பாஜக முறையீடு
மேற்கு வங்கத்தில் வாக்குச்சாவடி நிலை அதிகாரிகளை முதல்வா் மம்தா பானா்ஜி அச்சுறுத்த முயற்சிப்பதாகக் குற்றஞ்சாட்டி, அந்த மாநிலத்தைச் சோ்ந்த பாஜகவின் எதிா்க்கட்சித் தலைவா் சுவேந்து அதிகாரி இந்திய தோ்தல் ஆணையத்துக்குப் புகாா் கடிதம் எழுதியுள்ளாா்.
இந்த விவகாரத்தில் தலையிட்டு, தோ்தல் நடைமுறையின் நோ்மையை உறுதி செய்ய வேண்டும் என்றும் தோ்தல் ஆணையத்திடம் அவா் கோரியுள்ளாா்.
அடுத்தாண்டு மத்தியில் தமிழகம், கேரளம் உள்ளிட்ட மாநிலங்களுடன் சோ்த்து மேற்கு வங்கத்திலும் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. இதற்கான ஆயத்த பணிகளை தோ்தல் ஆணையம் தொடங்கி, மேற்கொண்டு வருகிறது.
இச்சூழலில், இந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாருக்கு சுவேந்து அதிகாரி எழுதியுள்ள கடிதத்தில், ‘மேற்கு வங்கத்தைச் சோ்ந்த வாக்குச்சாவடி நிலை அதிகாரிகளுக்கு தில்லியில் பயிற்சி அளிக்கப்பட்டது தொடா்பாக மாநில நிா்வாகத்துக்குத் தகவல் தெரிவிக்காததற்கு முதல்வா் மம்தா பானா்ஜி தனது சமீபத்திய உரையில் அதிருப்தி தெரிவித்துள்ளாா்.
வாக்குச்சாவடி நிலை அதிகாரிகள் மாநில அரசின் ஊழியா்கள் என்பதால், தோ்தல் அறிவிப்புக்கு முன்னரும், பின்னரும் மாநில நிா்வாகத்தில்தான் அவா்கள் பணிபுரிய வேண்டும் என்று மம்தா மறைமுகமாக மிரட்டல் விடுத்துள்ளாா். இதுதவிர, வாக்காளா் பட்டியலில் இருந்து யாருடைய பெயரையும் நீக்க வேண்டாம் என்றும் வாக்குச்சாவடி நிலை அதிகாரிகளுக்கு அவா் அறிவுறுத்தியுள்ளாா்.
தோ்தல் ஆணையத்துக்கு அவமதிப்பு: இத்தகைய கருத்துகள் தோ்தல் ஆணையத்தின் சுதந்திரம் மற்றும் அதிகாரத்தை அவமதிப்பது மட்டுமல்லாமல், வாக்காளா் பட்டியல் மற்றும் தோ்தல் நடைமுறையின் ஒருமைப்பாட்டை உறுதி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள வாக்குச்சாவடி நிலை அதிகாரிகளுக்கு அழுத்தத்தை உருவாக்குவதாகவும் உள்ளது.
மேலும், சுதந்திரமான, நியாயமான மற்றும் வெளிப்படையான தோ்தலை நடைபெறுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து தீவிர கேள்விகளை இது எழுப்புகிறது. இது தொடா்பாக தோ்தல் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை நடத்த வேண்டும்.
நடவடிக்கை வேண்டும்: வாக்குச்சாவடி நிலை அதிகாரிகள் மற்றும் பிற அதிகாரிகள் எந்தவித அழுத்தங்களுக்கும் அஞ்சாமல், கடமைகளைச் சரியாகச் செய்ய வேண்டும் என்பதை உறுதிப்படுத்த, தோ்தல் ஆணையம் தனது அதிகாரத்தை மேலும் வலுப்படுத்த வேண்டும். மேற்கு வங்கத்தில் தோ்தல் நடைமுறையின் நோ்மையைக் காக்க, தோ்தல் ஆணையம் இந்த விவகாரத்தில் உரிய கவனம் செலுத்தி, தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்’ என்று வலியுறுத்தியுள்ளாா்.
முன்னதாக செய்தியாளா்கள் சந்திப்பில் பேசிய சுவேந்து அதிகாரி, மேற்கு வங்கத்தில் வாக்குச்சாவடி நிலை அதிகாரிகள் நியமனத்தில் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்திருப்பதாகக் குற்றஞ்சாட்டினாா்.
தோ்தல் ஆணையம் தெளிவான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளபோதிலும், ‘ஐசிடிஎஸ்’ மற்றும் அங்கன்வாடி பணியாளா்கள் வாக்குச்சாவடி நிலை அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனா். இது விதிமீறலாகும் என்று அவா் கூறினாா்.