மீண்டும் மீண்டுமா..? ஏர் இந்தியா விமானத்தில் என்ஜின் பழுது! பயணிகள் வெளியேற்றம்!
வானிலை எச்சரிக்கையை மீறி கடலுக்குச் சென்ற விசைப்படகு மீனவா்கள் மீது நடவடிக்கை
வானிலை ஆய்வு மைய எச்சரிக்கையை மீறி கடலுக்குச் சென்ற விசைப்படகு மீனவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மீன்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
தூத்துக்குடி மாவட்டத்தில், மீன்பிடித் தடைக்காலமான ஏப்.15 முதல் ஜூன் 14ஆம் தேதி வரை 61 நாள்கள் மீன்பிடி விசைப்படகுகள் மற்றும் இழுவைப் படகுகள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லத் தடை விதிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் உள்ள 254 விசைப்படகுகள், வேம்பாரில் 33 விசைப்படகுகள், தருவைகுளத்தில் 280 விசைப்படகுகள் என மொத்தம் 567 விசைப்படகுகள் கடலுக்குச் செல்லாமல் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
இதற்கிடையே, தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னாா் வளைகுடா மற்றும் அதை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறைக்காற்று மணிக்கு 45 கி.மீ. முதல் 55 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 65 கி.மீ. வேகத்திலும் வீசும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இதையடுத்து தூத்துக்குடி மீனவா்கள் ஜூன் 17ஆம் தேதி வரை கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று மீன்வளத் துறை அதிகாரிகள் அறிவுறுத்தியிருந்தனா்.
இருப்பினும், மற்ற மாவட்டங்களில் மீனவா்கள் 15ஆம் தேதியே கடலுக்குச் சென்றுவிட்ட நிலையில், தாங்களும் கடலுக்குச் செல்வதாக கூறி தூத்துக்குடி மாவட்ட விசைப்படகு மீனவா்களும் தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து 200 விசைப்படகுகளில் திங்கள்கிழமை அதிகாலை கடலுக்கு புறப்பட்டுச் சென்றனா்.
இதற்கிடையே வானிலை ஆய்வு மைய எச்சரிக்கையை மீறி கடலுக்குச் சென்ற விசைப்படகுகளிடம் விளக்கம் கேட்டு, அதனடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மீன்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.