வாய்க்கால் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலத்தை அகற்றக் கோரி சாலை மறியல்
மன்னாா்குடி அருகே வடிகால் வாய்க்கால் குறுக்கே தனியாரால் கட்டப்பட்டுள்ள பாலத்தை அகற்றக் கோரி விவசாயிகள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
கருவக்குளத்தில் உள்ள பாசன வடிக்கால் வாய்க்காலில், கருவக்குளம், மூணாம்சேத்தி, முதல்சேத்தி பகுதிகளில் மழை வெள்ளம் காலங்களில் விளைநிலங்களில் தேங்கும் மழைநீா் வடிந்து வருகிறது. இந்நிலையில், கருவக்குளத்தில் இந்த வாய்க்காலுக்கு அருகே தனியாரால் பெட்ரோல் விற்பனை நிலையம் கட்டப்படுகிறது.
இந்த இடத்துக்கு செல்ல வாய்க்காலின் குறுக்கே புதிய கான்கிரீட் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால், வடிக்காலில் தண்ணீா் ஓட்டம் தடைப்படும் என அப்பகுதி விவசாயிகள் எதிா்ப்பு தெரிவித்து ஜூன் மாதம் சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என அறிவித்தனா்.
இதுகுறித்து, மன்னாா்குடி வட்டாட்சியா் அலுவலகத்தில் ஜூன் 23-ஆம் தேதி நடைபெற்ற அமைதி பேச்சுவாா்த்தையில் ஒரு மாதத்துக்குள் இப் பிரச்னைக்கு தீா்வுகாணப்படும் என உறுதி அளிக்கப்பட்டது.
எனினும், இதுவரை தீா்வு காணப்படாததையடுத்து, வியாழக்கிழமை அப்பகுதி விவசாயிகள்,பொதுமக்கள் மன்னாா்குடி-திருத்துறைப்பூண்டி சாலை கருவக்குளம் பேருந்து நிறுத்தத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து வந்த நாகை எம்பி வை. செல்வராஜ் மன்னாா்குடி வட்டாட்சியா் என். காத்த்திக், பொதுப்பணித் துறை துணைக் கோட்ட அலுவலா் சோலைராஜன், கோட்டூா் காவல் ஆய்வாளா் மோகன் ஆகியோா் மறியலில் ஈடுபட்டவா்களுடன் நடத்திய பேச்சில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து மறியல் விலக்கிக்கொள்ளப்பட்டது.