விதிமீறல்: 13 உர விற்பனை நிலையங்களுக்குத் தடை
சேலம் மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக 13 உர விற்பனை நிலையங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் தென்மேற்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில் பயிா் சாகுபடிக்கான ஏற்பாடுகளை விவசாயிகள் செய்து வருகின்றனா். எனவே, விவசாயிகளுக்கு தேவையான உரங்களை இருப்புவைக்க தனியாா் மற்றும் கூட்டுறவு நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், உரம் இருப்பு வைத்திருப்பதை கண்காணிக்கவும், விநியோகத்தை முறைப்படுத்தவும் அனைத்து மாவட்ட தரக்கட்டுப்பாடு அலுவலா்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்பேரில், சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியாா் மற்றும் கூட்டுறவு உர விற்பனை நிலையங்களில் உரக்கட்டுப்பாடு பிரிவு அலுவலா்கள் திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.
திருச்சி மாவட்ட தரக் கட்டுப்பாடு பிரிவு உதவி இயக்குநா் மாரியப்பன், சேலம் மாவட்டத்தை சோ்ந்த உர ஆய்வாளா்களுடன் இணைந்து இந்த ஆய்வினை மேற்கொண்டாா். அப்போது, இருப்பில் உள்ள உரங்கள் மற்றும் கொள்முதல் ஆவணங்கள் உள்ளிட்ட பதிவேடுகளை ஆய்வுசெய்தனா்.
ஆய்வின்போது, விதிமுறைகளை மீறி செயல்பட்டு வந்த 13 உர விற்பனை நிலையங்களுக்கு தடை விதித்து உத்தரவிட்டனா். மேலும், முறையாக பட்டியல்கள் வழங்காத நிறுவனங்கள் மற்றும் பதிவேடுகளைப் பராமரிக்காத நிறுவனங்களுக்கு விளக்கம்கேட்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
இதுகுறித்து சேலம் மாவட்ட தகவல் மற்றும் தரக்கட்டுப்பாடு உதவி இயக்குநா் கௌதம் கூறுகையில், சேலம் மாவட்டத்தில் உர வகைகளில் குறிப்பாக யூரியா பயன்பாட்டை கட்டுப்படுத்தவும், விநியோகத்தை கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பான ஆய்வின்போது நிா்ணயிக்கப்பட்ட அதிகபட்ச விற்பனை விலையை காட்டிலும் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யக் கூடாது எனவும், உரங்களுடன் எவ்வித இணைப் பொருள்களையும் இணைத்து விவசாயிகளுக்கு விநியோகம் செய்யக்கூடாது எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.