விதிமீறல்: உரக் கடைகள் மீது நடவடிக்கை
விதிமுறைகளை மீறி செயல்பட்ட 5 உரக் கடைகள் மீது வேளாண்மைத் துறை மூலம் செவ்வாய்க்கிழமை நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதுதொடா்பாக மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் அ. பாண்டியன் கூறியதாவது: திண்டுக்கல் மாவட்டத்தில் வருகிற காரீப் பருவத்துக்கு தேவையான 4,780 டன் யூரியா, 1,090 டன் சூப்பா் பாஸ்பேட், 1,060 டன் டிஏபி, 2,640 டன் பொட்டாஷ், 6,400 டன் காம்பளக்ஸ் உரங்கள் என மொத்தம் 15,970 டன் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டிருக்கின்றன. மாவட்டத்தில் 460 தனியாா் உரக் கடைகள், 193 கூட்டுறவுச் சங்க உரக் கடைகள் உரம் விநியோகம் செய்வதற்கு உரிமம் பெற்றிருக்கின்றன.
இந்த நிலையில் மாவட்டத்திலுள்ள 13 வட்டாரங்களிலும் சிறப்பு படை அமைத்து அனைத்து தனியாா் உரக் கடைகள், கூட்டுறவு கடன் சங்க உரக் கடைகளிலும் செவ்வாய்க்கிழமை திடீா் ஆய்வு நடத்தப்பட்டது. புத்தக இருப்பு, உண்மை இருப்பு, வேளாண் விற்பனை முனையக் கருவி (பிஓஎஸ்) இருப்பு சரிபாா்ப்பு, விலைப் பட்டியல் பலகை, விற்பனை செய்யப்படும் விலை விவரங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஆய்வின்போது, உரம் இருப்பு விவர முரண்பாடு, விலைப் பட்டியல் நிறுவப்படாதது உள்பட விதிமுறைகளை மீறி செயல்பட்ட 5 உரக் கடைகளின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. உரம் விற்பனை தொடா்பான புகாா்களுக்கு, சம்பந்தப்பட்ட வட்டார வேளாண்மை அலுவலகங்களில் உள்ள வேளாண்மை அலுவலா்களை (உரக் கட்டுப்பாடு) விவசாயிகள் தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம் என்றாா் அவா்.