விமான விபத்துக்கு விமானி காரணமா? அமெரிக்க செய்தித்தாளின் கருத்துக்கு ஏஏஐபி எதிர்...
விருதுநகர்: `ஒரே மாவட்டத்துக்கு இரண்டு தலைமை அரசு மருத்துவமனைகள் இங்குதான்..!' - மா.சுப்பிரமணியன்
விருதுநகர் மாவட்டம், கன்னிசேரிபுதூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா தலைமையில், நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் இராமச்சந்திரன்.ஆகியோர் முன்னிலையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ரூ.5.95 கோடி செலவில் விருதுநகர், திருச்சுழி, சிவகாசி, சாத்தூர், அருப்புக்கோட்டை மற்றும் இராஜபாளையம் ஆகிய தொகுதிகளில் கட்டப்பட்டுள்ள 14 புதிய மருத்துவக் கட்டடங்களை திறந்து வைத்து 20 கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கினார்.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், "கடந்த 4 ஆண்டுகளில் விருதுநகர் மாவட்டத்தில் 415 கோடியே 45 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு மருத்துவக் கட்டடங்கள் திறக்கப்பட்டுள்ளது. மேலும் மாவட்டத்தில் ரூ.127 கோடி மதிப்பீட்டில் புதிய அரசு தலைமை மருத்துவமனைகள் கட்டப்பட்டு வருகின்றன. தமிழகத்திலேயே விருதுநகர் மாவட்டத்தில் மட்டும்தான் ராஜபாளையம் மற்றும் அருப்புக்கோட்டை ஆகிய இரண்டு இடங்களில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

அடிக்கடி பட்டாசு வெடிவிபத்து நடக்கும் பகுதியான சிவகாசியில் முதலமைச்சரின் ஆணைப்படி ரூ.32.54 கோடி மதிப்பீட்டில் 50 படுக்கைகள் கொண்ட உயர் தீக்காய சிகிச்சைப்பிரிவு கட்டும் பணி தொடங்கி விரைவில் நிறைவு பெறவுள்ளது. மருத்துவத் துறை வளர்ச்சிக்கு தேவையான நிதியை இந்த மாவட்டத்தின் அமைச்சரான நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தந்து வருகிறார். அவர் நிதி தரத் தர கட்டடங்கள் தொடர்ச்சியாக கட்டப்பட்டு கொண்டிருக்கிறது. ஏற்கெனவே சொன்னதைப் போல 150 கோடி ரூபாய் அளவிலான கட்டட பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மாதத்திற்கு ஒருமுறை 20 கட்டடங்களை திறந்து வைக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது.” என தெரிவித்தார்.