தன்னை தற்காத்துக் கொள்ளவே இபிஎஸ் சுற்றுப்பயணம்: இரா. முத்தரசன்
விவசாயிகள் கேட்காத கோரிக்கைகளும் எங்களிடம் உள்ளன: எடப்பாடி பழனிசாமி
விவசாயிகள் கேட்காத கோரிக்கைகளும் எங்களிடம் உள்ளன என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் "மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்" பயணத்தை அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி திங்கள்கிழமை தொடங்கினார். இதற்காக மேட்டுப்பாளையம் வந்த அவர் காலையில் வனப் பத்திரகாளியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் தேக்கம்பட்டி பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் விவசாயிகள், நெசவாளர்கள், செங்கல் உற்பத்தியாளர்களுடன் கலந்துரையாடினார்.
அப்போது பேசிய அவர், கோவை, திருப்பூர் மாவட்டங்களில் வறட்சியான பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகளின் நலனுக்காக மத்திய அரசுக்கு அனுப்பிய அத்திகடவு-அவிநாசி திட்டம் மத்திய அரசால் திருப்பி அனுப்பப்பட்டது. இதற்கு பின்பு மாற்று திட்டமாக அத்திகடவு-அவிநாசி திட்டம் அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்டது. விவசாயிகள் மனம் குளிரும் அளவிற்கு பாசனம் பெறும் அளவில் அத்திகடவு-அவிநாசி திட்டம் ஆட்சிக்கு வந்தவுடன் விரிவாக செயல்படுத்தப்படும்.
ஆயிரம் கோடி மதிப்பீட்டில் திட்டமிடப்பட்ட அந்த திட்டம் இந்த ஆட்சியில் கைவிடப்பட்டது. விவசாயிகளின் ஆதரவுடன் மீண்டும் ஆட்சிக்கு வரும் போது விவசாயிகளின் கோரிக்கை நிறைவேற்றப்படும். விவசாயிகளுக்கு ஏரி, குளங்கள் அதிமுக ஆட்சியில் தூர்வாரப்பட்டது, ஒரு சொட்டு நீர் கூட வீணாகாமல் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன, உள்ளாட்சித் துறை மூலமும் தூர்வாரப்பட்டது. இந்த ஆட்சியில் தூர்வாரும் பணியை கிடப்பில் போட்டு விட்டனர்.
அத்திகடவு-அவிநாசி பழைய திட்டத்தில் பவானி அணை நிரம்பிய பின்புதான் தண்ணீர் எடுக்க முடியும். அதை செயல்படுத்த 15 வருடம் ஆகும். தொட்டிப் பாலம், டனல் போன்றவை அமைக்க வேண்டும், வனத் துறை அனுமதி வேண்டும், மத்திய அரசு அனுமதி வேண்டும், இப்படி பல பிரச்னைகள் இருந்தன. ஆனால் எப்படியாவது விவசாயிகளுக்கு தண்ணீர் கொடுக்க வேண்டும் என்பதற்காக அதிமுக ஆட்சியில் சிறப்புக் குழு அமைத்து அத்திகடவு-அவிநாசி திட்டம் மாற்று திட்டமாக செயல்படுத்தப்பட்டது.
நான் விவசாயி, இன்றைக்கும் விவசாயம் செய்து கொண்டு இருக்கின்றேன், அதனாலதான் என்னை யாரும் எதுவும் செய்ய முடியவில்லை. இந்தியாவிலயே சொட்டு நீர் பாசனத்திற்கு அதிக நிதியை அதிமுக ஆட்சியில் பெற்றுக்கொடுத்தோம். கால்நடை துறைக்காக அதிமுக ஆட்சியில் உருவாக்கப்பட்ட ஆராய்ச்சி மையம் பூட்டிகிடக்கின்றது, இது போன்ற பல திட்டங்கள் முடங்கி இருக்கின்றன. 3 முனை மின்சாரம் விவசாயிகளுக்கு அதிமுக ஆட்சியில் கொடுக்கப்பட்டது, இப்போது அதற்கும் கட்டுப்பாடு வந்து விட்டது.
வண்டல் மண் எடுப்பதற்கும் இந்த ஆட்சியில் இப்போது விடுவதில்லை. வனத்துறைக்கு அருகில் இருக்கும் பயிர்கள் வனவிலங்குளால் பாதிக்கப்படுவதை தடுக்க நடவடிக்கைகள் அதிமுக ஆட்சியில் எடுக்கப்பட்டது. நிறைய திட்டங்கள் எங்களிடம் இருக்கின்றது. செங்கல் சூளை தொடர்பான கோரிக்கைகள் அதிமுக ஆட்சி அமைந்தவுடன் கண்டிப்பாக நிறைவேற்றப்படும். அரசியல் பேசக்கூடாது என நினைத்தேன், ஆனால் திமுக ஆட்சியில் 4 முறை கட்டண உயர்வால் நெசவாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் கோரிக்கைகள் பரசீலித்து நடவடிக்கைகள் எடுக்கப்படும். கேரளத்தில் இருந்து தண்ணீர் உரிமையைப் பெறுவது உள்ளிட்டவை குறித்தும் பேசப்படும். சுத்தமான நீர் கிடைக்கப்பெற வேண்டும். நதிகளைப் பாதுகாக்க 11 ஆயிரம் கோடி நிதி கிடைத்து உள்ளது, இது அதிமுக ஆட்சியில் எடுக்கப்பட்ட நடவடிக்கைதான் காரணம். விவசாயிகள் கேட்காத கோரிக்கைகள் எங்களிடம் இருக்கின்றது, அதையும் செய்வோம், இப்பொது சொன்னால் வெளியில் தெரிந்து விடும் என்றார்.