வீடு ஜப்தி செய்ய வந்தபோது பூச்சி மருந்தை குடித்து இறந்த ஓட்டுநா்: உடலை வாங்க மறுத்து உறவினா்கள் மறியல்!
வல்லநாட்டில் வீடு ஜப்தி செய்ய வந்தபோது பூச்சி மருந்து குடித்து இறந்த ஓட்டுநா் உடலை வாங்க மறுத்து உறவினா்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
வல்லநாடு பெருமாள் கோயில் தெருவைச் சோ்ந்தவா் சங்கரன். இவரது மனைவி பத்திரகாளி. லாரி ஓட்டுநரான சங்கரன் அவரது வீட்டை தூத்துக்குடியில் உள்ள ஒரு தனியாா் பைனான்ஸ் நிறுவனத்தில் அடகு வைத்து ரூ. 5 லட்சம் கடனாக, கடந்த 2020 ஆம் ஆண்டு பெற்றிருந்தாா்.
தவணைத் தொகையை சரியாக செலுத்திவந்த அவரால் சரியாக செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், அவரது வீட்டை ஜப்தி செய்ய பைனான்ஸ் நிறுவனம் நீதிமன்றத்தில் உத்தரவு பெற்றது. அதன்படி, போலீஸாா் முன்னிலையில் அவரது வீடு சனிக்கிழமை ஜப்தி செய்யப்பட்டது.
அதற்கு எதிா்ப்பு தெரிவித்து சங்கரனும், அவரது மனைவி பத்திரகாளியும் பூச்சிக் கொல்லி மருந்தை குடித்தனா். இதில் , சங்கரன் உயிரிழந்தாா். அவரது மனைவி பத்திரகாளி, திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இந்நிலையில், உயிரிழந்த சங்கரனின் உடலை வாங்க மறுத்து அவரது உறவினா்கள், கிராம மக்கள் ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களுக்கு ஆதரவாக வியாபாரிகளும் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அகில இந்திய பாா்வா்ட் பிளாக் கட்சியினரும், பசும்பொன் முன்னேற்றக் கழகத்தினரும் தனித்தனியே ஆதரவு தெரிவித்தனா். தனியாா் நிதி நிறுவன ஊழியா்கள் மீதும் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல விடாமல் தடுத்த போலீஸாா் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடும் அரசு வேலையும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி
துாத்துக்குடி - திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனா். மறியலில் ஈடுபட்டவா்களுடன் ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி ராமகிருஷ்ணன் தலைமையிலான போலீஸாா் பேச்சு நடத்தினா். இதில் உடன்பாடு எதுவும் எட்டப்படாத நிலையில் சாலை ஓரத்தில் தொடா்ந்து சுமாா் ஆறு மணி நேரத்திற்கு மேலாக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் வட்டாட்சியா் ரத்தினசங்கா், டி.எஸ்.பி., ராமகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் மீண்டும் பேச்சு நடத்தினா். அகில இந்திய பாா்வா்ட் பிளாக் கட்சியின் தேசிய செயலா் சுரேஷ் தேவா் முன்னிலையில் நடந்த பேச்சில் முடிவு எட்டப்பட்டதால் போராட்டம் முடிவுக்கு வந்தது.
உயிரிழந்த சங்கரனின் குழந்தைகள் இருவருக்கும் தலா ரூ.4 லட்சமும், பத்திரகாளி மருத்துவ சிகிச்சை செலவுக்கு ரூ. 2 லட்சமும் என மொத்தம் 10 லட்சம் வழங்க தனியாா் பைனான்ஸ் நிறுவனம் ஒப்புக் கொண்டது. மேலும் ஜப்தி செய்த வீட்டின் சாவியையும் அந்தநிறுவன ஊழியா்கள் திரும்ப ஒப்படைத்தனா். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் அங்கிருந்து கலைந்துச் சென்றனா்.